இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனை துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத் தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா ஏனைய அனத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. இந் நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள் நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.
கடவுள் வாழ்த்து
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே;
தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே;
முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.
நூல்
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. 1
உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு. 2
ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;
ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,
தேரின், கோள் நட்புத் திசைக்கு. 3
யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;
கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,
மானம் உடையார் மதிப்பு. 4
கொல்லாமை முன் இனிது; கோல் கோடி, மா ராயன்,
செய்யாமை முன் இனிது; செங்கோலன் ஆகுதல்,
எய்தும் திறத்தால், இனிது என்ப; யார் மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு. 5
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே;
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே;
வாய்ப்பு உடையாராகி, வலவைகள் அல்லாரைக்
காப்பு அடையக் கோடல் இனிது. 6
அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே;
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே;
தந்தையே ஆயினும், தான் அடங்கான் ஆகுமேல்,
கொண்டு அடையான் ஆகல் இனிது. 7
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
கார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை,
பேதுறார், கேட்டல் இனிது. 8
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;
அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
பங்கம்இல் செய்கையர் ஆகி, பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது. 9
கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே;
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு. 10
அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே;
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே;
உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்
பெருமைபோல் பீடு உடையது இல். 11
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே;
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;
மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
திருவும், தீர்வு இன்றேல், இனிது. 12
மானம் அழிந்தபின், வாழாமை முன் இனிதே;
தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே;
ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது. 13
குழவி தளர் நடை காண்டல் இனிதே;
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே;
வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து,
மனன் அஞ்சான் ஆகல் இனிது. 14
பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது ஆற்ற;
வறன் உழக்கும் பைங் கூழ்க்கு வான் சோர்வு இனிதே;
மற மன்னர் தம் கடையுள், மா மலைபோல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது. 15
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே;
மிக்கரைச் சேர்தல் மிக மாண முன் இனிதே;
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது. 16
நட்டார்க்கு நல்ல செயல் இனிது; எத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே;
பற்பல தானியத்ததாகி, பலர் உடையும்
மெய்த் துணையும் சேரல் இனிது. 17
மன்றில் முதுமக்கள் வாழும் பதி இனிதே;
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே;
எஞ்சா விழுச் சீர் இரு முது மக்களைக்
கண்டு எழுதல் காலை இனிது. 18
நட்டார்ப் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே;
பட்டாங்கு பேணிப் பணிந்து ஒழுகல் முன் இனிதே;
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
தக்குழி ஈதல் இனிது. 19
சலவரைச் சாரா விடுதல் இனிதே;
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே;
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது. 20
பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே;
அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது. 21
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே;
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே;
பெரு வகைத்து ஆயினும், பெட்டவை செய்யார்,
திரிபு இன்றி வாழ்தல் இனிது. 22
காவோடு அறக் குளம் தொட்டல் மிக இனிதே;
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே;
பாவமும் அஞ்சாராய், பற்றும் தொழில் மொழிச்
சூதரைச் சோர்தல் இனிது. 23
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே;
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே;
இல்லது காமுற்று, இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது. 24
ஐ வாய வேட்கை அவா அடக்கல் முன் இனிதே;
கைவாய்ப் பொருள் பெறினும், கல்லார்கண் தீர்வு இனிதே;
நில்லாத காட்சி நிறை இல் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது. 25
நச்சித் தற் சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே;
உட்கு இல்வழி, வாழா ஊக்கம் மிக இனிதே;
எத் திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல். 26
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே;
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே;
ஊனம் கொண்டாடார், ஊறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது. 27
ஆற்றானை, 'ஆற்று' என்று அலையாமை முன் இனிதே;
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;
ஆக்கம் அழியினும், அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல். 28
கயவரைக் கை இகந்து வாழ்தல் இனிதே;
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே;
'எளியர், இவர்!' என்று இகழ்ந்து உரையாராகி,
ஒளி பட வாழ்தல் இனிது. 29
நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின், நன்கு இனியது இல். 30
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது. 31
கற்று அறிந்தார் கூறும் கருமப் பொருள் இனிதே;
பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே;
தெற்றெனவு இன்றித் தெளிந்தாரைத் தீங்கு ஊக்காப்
பத்திமையின் பாங்கு இனியது இல். 32
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே;
தானே மடிந்து இராத் தாளாண்மை முன் இனிதே;
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
தானை தடுத்தல் இனிது. 33
எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே;
சொல்லுங்கால் சோர்வு இன்றிச் சொல்லுதல் மாண்பு இனிதே;
புல்லிக் கொளினும் பொருள் அல்லார் தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது. 34
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் மாண்பு இனிதே;
முன்தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே;
பற்று இலனாய்ப் பல்லுயிர்க்கும் பார்த்து உற்றுப் பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது. 35
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே;
செவ்வியனாய்ச் செற்றுச் சினம் கடிந்து வாழ்வு இனிதே;
கவ்வித் தாம் கொண்டு, தாம் கண்டது காமுற்று,
வவ்வார் விடுதல் இனிது. 36
இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
தட மென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது. 37
சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே;
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே;
எத் துணையும் ஆற்ற இனிது என்ப, பால் படும்
கற்றா உடையான் விருந்து. 38
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே;
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே;
உற்ற பொலிசை கருதி, அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது. 39
பத்துக் கொடுத்தும், பதி இருந்து, வாழ்வு இனிதே;
வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல். 40
Monday, October 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment