Saturday, October 27, 2007

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- பழமொழி நானூறு

முன்றுறையரையனார் இயற்றிய பழமொழி நானூறு
இந்நூல் நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந் நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருத்தலின், பழமொழி என்னும் சிறப்புப்பெயர் பெற்றது. பாடல் தொதையைக் கொண்டு, "பழமொழி நானூறு" என்றும் இது குறிக்கப் பெறும். பழமொழி பாடலின் இறுதியில் வருகின்றது. முன் இரண்டு அடிகளில் அதற்கு உரிய விளக்கத்தைக் காணலாம். மூன்றாம் அடியில் பெரும்பாலும் ஆடூஉ முன்னிலை, மகடூஉ முன்னிலைத் தொடர்களுள் ஒன்று இடம் பெறுகிறது. முன்றுறை அரையனார் என்ற பெயர் இயற்பெயர் என்று எண்ணுதற்கு இடமில்லை. முன்றுறை என்னும்இடத்தில் அரசு புரிந்த அரசர் என்பதே இதன் பொருளாகும். "முன்றுறை மன்னவன்" என்பது தற்சிறப்புப் பாயிரத்துள் காண்கிறது. மேலும் "அரையர்" என்பது ஒரு மரபுப் பெயராகவோ குடிப் பெயராகவோ இருத்தலும் கூடும். முன்றுறை எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவர் சமண சமயத்தினர் என்பது தற்சிறப்புப் பாயிரத்தால் விளங்கும்.


தற்சிறப்புப் பாயிரம்
பிண்டியின் நீழல் பெருமான் அடி வணங்கி,
பண்டைப் பழமொழி நானூறும் கொண்டு, இனிதா,
முன்றுறை மன்னவன், நான்கு அடியும் செய்து அமைத்தான்,
இன் துறை வெண்பா இவை.
கடவுள் வணக்கம்
அரிது அவித்து, ஆசு இன்று உணர்ந்தவன் பாதம்,
விரி கடல் சூழ்ந்த வியன் கண் மா ஞாலத்து,
உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல,
பெரியதன் ஆவி பெரிது.
நூல்
1. கல்வி
ஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமே?-ஆற்றச்
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லையே இல்லை,
மரம் போக்கிக் கூலி கொண்டார். 1
சொற்றொறும் சோர்வு படுதலால், சோர்வு இன்றிக்
கற்றொறும், "கல்லாதேன்" என்று, வழி இரங்கி,
உற்று ஒன்று சிந்தித்து, உழந்து ஒன்று அறியுமேல்,
கற்றொறும் தான் கல்லாத வாறு. 2
விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத்
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி; விளக்கு
மருள் படுவது ஆயின்,-மலை நாட!-என்னை
பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள். 3
ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை; அந் நாடு
வேற்று நாடு ஆகா; தமவே ஆம்; ஆயினால்,
ஆற்று உணா வேண்டுவது இல். 4
"உணற்கு இனிய இந் நீர் பிறிதுஉழி இல்" என்னும்
கிணற்று அகத்துத் தேரைபோல் ஆகார், கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக்
கற்றலின், கேட்டலே நன்று. 5
"உரை முடிவு காணான்; இளமையோன்!" என்ற
நரை முது மக்கள் உவப்ப-நரை முடித்து,
சொல்லால் முறை செய்தான், சோழன்;-குல விச்சை
கல்லாமல் பாகம் படும். 6
புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்;-நலம் மிக்க
பூம் புனல் ஊர்!-பொது மக்கட்கு ஆகாதே;
பாம்பு அறியும் பாம்பின கால். 7
நல்லார் நலத்தை உணரின், அவரினும்
நல்லார் உணர்ப; பிறர் உணரார்;-நல்ல
மயில் ஆடும் மா மலை வெற்ப!-மற்று என்றும்,
அயிலாலே போழ்ப, அயில். 8
கற்று அறிந்தார் கண்ட அடக்கம்; அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர்-தெற்ற
அறை கல் அருவி அணி மலை நாட!
நிறை குடம் நீர் தளும்பல் இல். 9
விதிப் பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை இல்லார்,
கதிப்பவர் நூலினைக் கையிகந்தார் ஆகி,
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல்,-
மதிப்புறத்துப் பட்ட மறு. 10
2. கல்லாதார்
கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார்
தெற்ற உணரார், பொருள்களை- எற்றேல்,
அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி. 11
கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால், சோர்வு படுதலால் - நல்லாய்
வினா முந்துறாத உரை இல்லை; இல்லை,
கனா முந்துறாத வினை. 12
கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால்
'நல்லேம் யாம்' என்று ஒருவன் நன்கு மதித்தல் என்?
சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,-
சொல்லாக்கால் சொல்லுவது இல். 13
கல்வியான் ஆய கழி நுட்பம், கல்லார் முன்
சொல்லிய நல்லவும், தீய ஆம்,-எல்லாம்
இவர் வரை நாட!-தமரை இல்லார்க்கு
நகரமும் காடு போன்றாங்கு. 14
கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓர்
பொல்லாதது இல்லை; ஒருவற்கு-நல்லாய்!
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை,
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. 15
கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து, கல்லாதார்
சொல் தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - எற்று எனின்
தானும் நடவான் முடவன், பிடிப்பூணி,
யானையோடு ஆடல் உறவு. 16
3. அவையறிதல்
கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண்
வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்;-வேட்கையால்
வண்டு வழிபடரும் வாள் கண்ணாய்! தோற்பன
கொண்டு புகாஅர், அவை. 17
ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு
இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா
பெரு வரை நாட! சிறிதேனும் இன்னாது,
இருவர் உடன் ஆடல் நாய். 18
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில்
பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி
மொழிந்தால் மொழி அறியான் கூறல், முழந்தாள்
கிழிந்தானை மூக்குப் பொதிவு. 19
கல்லாதும், கேளாதும், கற்றார் அவை நடுவண்
சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவி
பாய் வரை நாட! பரிசு அழிந்தாரோடு
தேவரும் ஆற்றல் இலர். 20
அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்,
புகல் அறியார் புக்கு, அவர் தாமே - இகலினால்
வீண் சேர்ந்த புன் சொல் விளம்பல் அது அன்றோ,
பாண் சேரிப் பல் கிளக்கும் ஆறு. 21
மானமும் நாணும் அறியார், மதி மயங்கி,
ஞானம் அறிவார் இடைப்புக்கு, தாம் இருந்து,
ஞானம் வினாஅய் உரைக்கின், நகை ஆகும்
யானைப் பல் காண்பான் புகல். 22
அல்லவையுள் தோன்றி, அலவலைத்து, வாழ்பவர்
நல் அவையுள் புக்கு இருந்து, நா அடங்க, - கல்வி
அளவு இறந்து மிக்கார் அறிவு எள்ளிக் கூறல்
மிளகு உளு உண்பான் புகல். 23
நல் அவை கண்டக்கால் நாச் சுருட்டி, நன்று உணராப்
புல் அவையுள் தம்மைப் புகழ்ந்து உரைத்தல்,-புல்லார்
புடைத் தறுகண் அஞ்சுவான், இல்லுள், வில் ஏற்றி,
இடைக் கலத்து எய்துவிடல். 24
நடலை இலர் ஆகி நன்று உணராராய
முடலை முழுமக்கள் மொய் கொள் அவையுள்,
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல்
கடலுளால் மாவடித் தற்று. 25
4. அறிவுடைமை
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின். 26
ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்,
மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார்
பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும்,
காய்கலா ஆகும் நிலா. 27
நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே,
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல்
வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட!
கற்றறிவு போகா கடை. 28
ஆணம் உடைய அறிவினார் தம் நலம்
மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்,-
மான் அமர்க் கண்ணாய்!-மறம் கெழு மா மன்னர்,
யானையால் யானை யாத்தற்று. 29
தெரிவு உடையாரோடு, தெரிந்து உணர்ந்து நின்றார்,
பரியாரிடைப் புகார், பண்பு அறிவார், மன்ற
விரியா இமிழ் திரை வீங்கு நீர்ச் சேர்ப்ப
அரிவாரைக் காட்டார் நரி. 30
பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார்
சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?-விற் கீழ்
அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்!-அறியும்,
பெரிது ஆள்பவனே பெரிது. 31
பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு,
கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்து
வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்! விண் இயங்கும்
ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல். 32
அரு விலை மாண் கலனும், ஆன்ற பொருளும்,
திரு உடையராயின், திரிந்தும்-வருமால்
பெரு வரை நாட! பிரிவு இன்று, அதனால்
திருவினும் திட்பம் பெறும். 33
5. ஒழுக்கம்
விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார்
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர்!-அஃதன்றோ
நெய்த்தலைப் பால் உக்கு விடல். 34
கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
எள்ளற்க, யார் வாயும் நல் உரையை!-தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால்,
பார்ப்பாரும் தின்பர் உடும்பு. 35
தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார்,
செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது,
நின் நடையானே நடஅத்தா! நின் நடை
நின் இன்று அறிகிற்பார் இல். 36
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றிக் கொண்டக்கால்,
பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும்,
ஓர்த்தது இசைக்கும் பறை. 37
தம் குற்றம் நீக்கலர் ஆகி, பிறர் குற்றம்
எங்கெங்கும் தீர்த்ததற்கு இடை புகுதல்-எங்கும்
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது,
அயல் வளி தீர்த்து விடல். 38
கெடுவல் எனப்பட்டக் கண்ணும், தனக்கு ஓர்
வடு அல்ல செய்தலே வேண்டும்;-நெடு வரை
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய
கல் தேயும்; தேயாது, சொல். 39
பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி-மருந்தின்
தணியாது விட்டக்கால், தண் கடல் சேர்ப்ப!
பிணி ஈடு அழித்து விடும். 40
உரிஞ்சி நடப்பாரை, உள் அடி நோவா,
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை;-செருந்தி
இருங் கழித் தாழும் எறி கடல் தண் சேர்ப்ப!
பெரும் பழியும் பேணாதார்க்கு இல். 41
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும்,
'கோவிற்குக் கோவலன்' என்று, உலகம் கூறுமால்
தேவர்க்கு, மக்கட்கு, என வேண்டா தீங்கு உரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல். 42
6. இன்னா செய்யாமை
பூ உட்கும் கண்ணாய்!-'பொறுப்பர்' எனக் கருதி,
யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா
தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும்,
நோவச் செயின், நோயின்மை இல். 43
வினைப் பயம் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு,
நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும்
புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்!
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. 44
'ஆற்றார் இவர்' என்று, அடைந்த தமரையும்,
தோற்ற, தாம் எள்ளி நலியற்க!-போற்றான்,
கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும்
உடையானைக் கவ்வி விடும். 45
நெடியது காண்கலாய்; நீ ஒளியை நெஞ்சே!
கொடியது கூறினாய் மன்ற;-அடியுளே,
முற்பகல் கண்டான் பிறன் கேடு, தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும். 46
'தோற்றத்தால் பொல்லார்; துணை இலார்; நல்கூர்ந்தார்;
மாற்றத்தால் செற்றார்' என, வலியார் ஆட்டியக்கால்,
ஆற்றாது அவர் அழத கண்ணீர் அவை அவர்க்குக்
கூற்றமாய் வீழ்ந்து விடும். 47
'மிக்கு உடையர் ஆகி, மிக மதிக்கப் பட்டாரை
ஒற்கப்பட முயறும்' என்றல் இழுக்கு ஆகும்;-
நற்கு எளிது ஆகிவிடினும், நளிர் வரைமேல்
கல் கிள்ளி, கை உயர்ந்தார் இல். 48
நீர்த் தகவு இல்லார் நிரம்பாமைத் தம் நலியின்,
கூர்ந்து அவரைத் தாம் நலிதல் கோள் அன்றால், சான்றவர்க்கு;-
பார்த்து ஓடிச் சென்று, கதம் பட்டு நாய் கவ்வின்,
பேர்த்து நாய் கவ்வினார் இல். 49
காழ் ஆர மார்ப! கசடு அறக் கை காவாக்
கீழாயோர் செய்த பிழைப்பினை, மேலாயோர்
உள்ளத்துக் கொண்டு நேர்ந்து ஊக்கல், குறு நரிக்கு
நல்ல நாராயம் கொளல். 50
7. வெகுளாமை
இறப்பச் சிறயவர் இன்னா செயினும்,
பிறப்பினால் மாண்டார் வெகுளார்;-திறத்து உள்ளி
நல்ல விறகின் அடினும், நனி வெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு. 51
'ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை
மாறி ஒழுகல் தலை' என்ப;-ஏறி
வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப!
தெளியானைத் தேறல் அரிது. 52
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ?
கற்று அறிந்தார்தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்;
நெல்செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை,
தற் செய்ய, தானே கெடும். 53
எய்தா நகைச் சொல் எடுத்து உரைக்கப்பட்டவர்
வைதாராக் கொண்டு விடுமர்மன்; அஃதால்
புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு
தனக்கு நோய் செய்துவிடல். 54
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்,
பரியாதார் போல இருக்க - பரிவு இல்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
அம்பலம் தாழ்க் கூட்டுவார். 55
கை ஆர உண்டமையால், காய்வார் பொருட்டாக,
பொய்யாகத் தம்மைப் பொருள் அல்லார் கூறுபவேல்,-
மை ஆர உண்ட கண் மாண் இழாய்!-என் பரிப,
செய்யாத எய்தா எனில். 56
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்து, எதிர் சொல்லுபவோ, கற்று அறிந்தார்?-தீம் தேன்
முசுக் குத்தி நக்கும் மலை நாட!-தம்மைப்
பசுக் குத்தின், குத்துவார் இல். 57
நோவ உரைத்தாரைத் தாம் பொறுக்க லாகாதார்,
நாவின் ஒருவரை வைதால், வயவு உரை,-
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய்!-அது அன்றோ,
தீ இல்லை ஊட்டும் திறம். 58
கறுத்து ஆற்றித் தம்மைக் கடிய செய்தாரைப்
பொறுத்து, ஆற்றிச் சேறல் புகழால்;-ஒறுத்து ஆற்றின்,
வான் ஓங்கு உயர் வரை வெற்ப! பயம் இன்றே
தான் நோன்றிட வரும், சால்பு. 59
8. பெரியாரைப் பிழையாமை
அறிவு அன்று; அழகு அன்று; அறிவதூஉம் அன்று;
சிறியர் எனப்பாடும் செய்யும்;-எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப! குழுவத்தார் மேயிருந்த,
என்று ஊடு அறுப்பினும், மன்று. 60
ஆமாலோ என்று பெரியாரை முன் நின்ற
தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,-
போம் ஆறு அறியா, புலன் மயங்கி, ஊர் புக்கு,
சாமா கண் காணாத வாறு. 61
எல்லாத் திறத்தும், இறப்பப் பெரியாரைக்,
கல்லாத் துணையார் கயப்பித்தல் சொல்லின்,-
நிறைந்து ஆர் வளையினாய்!-அஃதால், எருக்கு
மறைந்து, யானை பாய்ச்சிவிடல். 62
முன்னும் ஒரு கால் பிழைப்பானை ஆற்றவும்,
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ?-இன் இசை
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர!-ஈனுமோ,
வாழை இரு கால் குலை? 63
நெடுங் காலம் வந்தார் நெறி இன்மை கண்டு,
நடுங்கிப் பெரிதும் நலிவார், பெரியர்;-
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப!-கெடுமே,
கொடும்பாடு உடையான் குடி. 64
9. புகழ்தலின் கூறுபாடு
செய்த கருமம் சிறிதானும் கைகூடா;
மெய்யா உணரவும் தாம் படார்; எய்த
நலத் தகத் தம்மைப் புகழ்தல்-'புலத்தகத்துப்
புள் அரைக்கால் விற்பேம்' எனல். 65
தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தின்,
அமராததனை அகற்றலே வேண்டும்;-
அமை ஆரும் வெற்ப!-அணியாரே தம்மை,
தமவேனும், கொள்ளாக் கலம். 66
தாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,
வாயின் மீக்கூறுமவர்களை ஏத்துதல்-
நோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்
நாயைப் புலியாம் எனல். 67
பல் கிளையுள் பார்த்துறான் ஆகி, ஒருவனை
நல்குரவால், வேறாக நன்கு உணரான் சொல்லின்,
உரையுள் வளவிய சொல் சொல்லாததுபோல்,
நிரையுள்ளே இன்னா, வரைவு. 68
10. சான்றோர் இயல்பு
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியேபோல்,
வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகித்
தாறாப் படினும், தலைமகன் தன் ஒளி,
நூறாயிரவர்க்கு நேர். 69
ஒற்கம் தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்
நிற்பவே, நின்ற நிலையின்மேல்;-வற்பத்தால்
தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்,
புல் மேயாது ஆகும், புலி. 70
மாடம் அழிந்தக்கால், மற்றும் எடுப்பது ஓர்
கூடம் மரத்திற்குத் துப்பு ஆகும்;-அஃதேபோல்,
பீடு இலாக்கண்ணும், பெரியோர் பெருந் தகையர்;-
ஈடு இல்லதற்கு இல்லை, பாடு. 71
இணர் ஓங்கி வந்தாரை, என் உற்றக்கண்ணும்,
உணர்பவர் அஃதே உணர்ப;-உணர்வார்க்கு
அணி மலை நாட!-அளறு ஆடிக்கண்ணும்,
மணி மணியாகி விடும். 72
கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப் பிறந்தார்,
மற்றொன்று அறிவாரின், மாண் மிக நல்லால்;
பொற்ப உரைப்பான் புக வேண்டா,-கொற்சேரித்
துன்னூசி விற்பவர் இல். 73
முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும்,
தொல்லை, அளித்தாரைக் கேட்டு அறிதும்;-சொல்லின்,
நெறி மடல் பூந் தாழை நீடு நீர்ச் சேர்ப்ப!
அறி மடமும் சான்றோர்க்கு அணி. 74
பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற;-பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்,
உரைத்தால், உரை பெறுதல் உண்டு. 75
'எனக்குத் தகவு அன்றால்' என்பதே நோக்கி,
தனக்குக் கரி ஆவான் தானாய், - தவற்றை
நினைத்து, தன் கை குறைத்தான் தென்னவனும் காணார்
எனச் செய்யார், மாணா வினை. 76
தீப் பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க்
காப்பாரே போன்று உரைத்த பொய், குறளை,- ஏய்ப்பார் முன்
சொல்லோடு ஒருப்படார், சோர்வு இன்றி மாறுபவே-
வில்லொடு காக்கையே போன்று. 77
மடங்கிப் பசிப்பினும், மாண்புடை யாளர்,
தொடங்கிப் பிறர் உடைமை மேவார்-குடம்பை
மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப!
கடலொடு காட்டு ஒட்டல் இல். 78
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும்,
உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,-
மரையா கன்று ஊட்டும் மலை நாட!-மாயா;
நரை ஆன் புறத்து இட்ட சூடு. 79
கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும்,
ஒன்றும், சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய்விடினும், உயர்ந்தார்ப் படும் குற்றம்-
குன்றின்மேல் இட்ட விளக்கு. 80
11. சான்றோர் செய்கை
ஈட்டிய ஒண் பொருள் இன்றெனினும், ஒப்புரவு
ஆற்றும், குடிப் பிறந்த சான்றவன்;-ஆற்றவும்
போற்றப் படாதாகி, புல் இன்றி மேயினும்,
ஏற்றுக் கன்று ஏறாய் விடும். 81
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும்,
'இடம் கண்டு அறிவாம்' என்று எண்ணி இராஅர்;-
மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர்
கடம் கொண்டும் செய்வார் கடன். 82
மொய் கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப்
பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலாம்?-
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,
கை உண்டும், கூறுவர் மெய். 83
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா; அடைந்தாரை
மாண்டிலார் என்றே மறுப்பக் கிடந்ததோ?
பூண் தாங்கு இள முலைப் பொற்றொடீஇ!-பூண்ட
பறை அறையாப் போயினார் இல். 84
பரியப் படுபவர் பண்பு இலரேனும்,
திரியப் பெறுபவோ சான்றோர்?-விரி திரைப்
பார் எறியும் முந்நீர்த் துறைவ!-கடன் அன்றோ,
ஊர் அறிய நட்டார்க்கு உணா? 85
தெற்றப் பகைவர் இடர்பாடு கண்டக்கால்,
மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்;-தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும், சான்றோர்
அவைப்படின், சாவாது பாம்பு. 86
'இறப்ப எமக்கு ஈது இழிவரவு!' எண்ணார்,
பிறப்பின் சிறியாரைச் சென்று, பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே-
தால அடைக்கலமே போன்று. 87
பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச்
சிறியார் இனமாய் ஒழுகுதல்-எறி இலை
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய்!-அஃது அன்றோ,
பூவொடு நார் இயைக்குமாறு. 88
சிறியவர் எய்திய செல்வத்தின், நாண
பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;-
மது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின்
முது நெய் தீது ஆகலோ இல். 89
12. கிழ்மக்கள் இயல்பு
மிக்குப் பெருகி, மிகு புனல் பாய்ந்தாலும்,
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல், மிக்க
இன நலம் நன்கு உடைய ஆயினும், என்றும்,
மன நல ஆகாவாம் கீழ். 90
'தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்;
மிக்காரால்' என்று, சிறியாரைத் தாம் தேறார்;-
கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ,
அக்காரம் சேர்ந்த மணல். 91
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
வெந் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?-
மைந்து இறைகொண்ட மலை மார்ப!-ஆகுமோ,
நந்து உழுத எல்லாம் கணக்கு. 92
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு. 93
ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத
மூர்க்கர்க்கு உறுதி மொழியற்க!-மூர்க்கன் தான்
கொண்டதே கொண்டு, விடான் ஆகும்;-ஆகாதே,
உண்டது நீலம் பிறிது. 94
தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால்,
இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர்
யாவரே ஆயினும், நன்கு ஒழுகார்;-கைக்குமே,
தேவரே தின்னினும் வேம்பு. 95
காடு உறை வாழ்க்கைக் கரு வினை மாக்களை
நாடு உறைய நல்கினும், நன்கு ஒழுகார்;-நாள்தொறும்
கையுளதாகிவிடினும், குறும்பூழ்க்குச்
செய் உளது ஆகும், மனம். 96
கருந் தொழிலர் ஆய கடையாயார் தம்மேல்
பெரும் பழி ஏறுவ பேணார்;-இரும் புன்னை
புன் புலால் தீர்க்கும் துறைவ!-மற்று அஞ்சாதே,
தின்பது அழுவதன் கண். 97
மிக்க பழி பெரிதும் செய்தக்கால், மீட்டு அதற்குத்
தக்கது அறியார், தலைசிறத்தல்,-எக்கர்
அடும்பு அலரும் சேர்ப்ப!-அகலுள் நீராலே
துடும்பல் எறிந்து விடல். 98
மாணாப் பகைவரை மாறு ஒறுக்கல்லாதார்
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்ததுபோல்,-
ஊண் ஆர்ந்து, உதவுவது ஒன்று இல் எனினும், கள்ளினைக்
காணாக் களிக்கும், களி. 99
உழந்ததூஉம் பேணாது, ஒறுத்தமை கண்டும்,
விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்,-
தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப!
முழம் குறைப்பச் சாண் நீளூமாறு. 100


அல்லவை செய்ப, அலப்பின்; அல்வாக்கால்,
செல்வது அறிகிலர் ஆகிச் சிதைந்து எழுவர்;-
கல்லாக் கயவர் இயல்போல்;-நரியிற்கு ஊண்
நல் யாண்டும் தீ யாண்டும் இல். 101
கூர் அறிவினார் வாய்க் குணமுடைச் சொல் கொள்ளாது,
கார் அறிவு கந்தா, கடியன செய்வாரைப்
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ?-
ஊர் அறியா மூரியோ இல். 102
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம்
பரந்து ஒருவர் நாடுங்கால், பண்புடையார் தோன்றார்;-
மரம் பயில் சோலை மலை நாட!-என்றும்
குரங்கினுள் நன் முகத்த இல். 103
ஊழாயினாயிரைக் களைந்திட்டு, உதவாத
கீழாயினாரைப் பெருக்குதல்,-யாழ் போலும்
தீம் சொல் மழலையாய்!-தேன் ஆர் பலாக் குறைத்து,
காஞ்சிரை நட்டு விடல். 104
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச்
சிறியார்க்குச் செய்து விடுதல்,-பொறி வண்டு
பூ மேல் இசை முரலும் ஊர்!-அது அன்றோ,
நாய்மேல் தவிசு இடும் ஆறு. 105
பேதுறவு தீரப் பெருக்கத் தலையளித்து,
ஆசறு செய்யாராய், ஆற்றப் பெருகினும்,
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத
கூதறைகள் ஆகார், குடி. 106
13. கீழ்மக்கள் செய்கை
நெறியால் உணராது, நீர்மையும் இன்றி,
சிறியார், 'எளியரால்!' என்று,-பெரியாரைத்
தங்கள் நேர் வைத்து, தகவு அல்ல கூறுதல்-
திங்களை நாய் குரைத்தற்று. 107
'மறுமை ஒன்று உண்டோ ? மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு செய்ம்மின்' என்பாரே-நறு நெய்யுள்
கட்டி அடையைக் களைவித்து, கண் சொரீஇ,
இட்டிகை தீற்று பவர். 108
கண் இல் கயவர் கருத்து உணர்ந்து, கைம்மிக
நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்,-
எண்ணி இடர் வரும் என்னார், புலி முகத்து
உண்ணி பறித்துவிடல். 109
திருந்தாய் நீ, ஆர்வத்தை! தீமை உடையார்,
'வருந்தினார்' என்றே வயப்படுவது உண்டோ ?
அரிந்து அரிகால் பெய்து அமையக் கூட்டியக் கண்ணும்,
பொருந்தா மண், ஆகா, சுவர். 110
குலத்துச் சிறயார், கலாம் தணிப்பான் புக்கு
விலக்குவார் மேலும், எழுதல்-நிலத்து
நிலை அழுங்க வேண்டிப் புடைத்தக்கால், வெண் மாத்
தலை கீழாக் காதிவிடல். 111
சொல் எதிர்ந்து, தம்மை வழிபட்டு ஒழுகலராய்,
கல் எறிந்தாற் போலக் கலாம் தலைக்கொள்வாரை
இல் இருந்து, ஆற்ற முனிவித்தல்,-உள் இருந்து,
அச்சாணி தாம் கழிக்குமாறு. 112
நாணார், பரியார், நயன் இல செய்து ஒழுகும்
பேணா அறிவு இலா மாக்களைப் பேணி,
ஒழுக்கி, அவரோடு உடனுறைசெய்தல்-
புழுப் பெய்து புண் பொதியுமாறு. 113
பொல்லாத சொல்லி, மறைந்து ஒழுகும் பேதைகள்
சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்;-நல்லாய்!-
மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயால் கெடும். 114
தாக்குற்ற போழ்தில் தமரேபோல் நன்கு உரைத்து,
போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ, மேன்மைக்கண்
நோக்கு அற்றவரைப் பழித்தல் என்? என்னானும்,
மூக்கு அற்றதற்கு இல், பழி. 115
கோவாத சொல்லும் குணன் இலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிது ஆகும்;-நாவாய்
களிக்கள்போல் தூங்கும் கடல் சேர்ப்ப!-வாங்கி
வளி தோட்கு இடுவாரோ இல். 116
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதாப்
பரியார், பயன் இன்மை செய்து, பெரியார் சொல்
கொள்ளாது, தாம் தம்மைக் காவாதவர்,-பிறரைக்
கள்ளராச் செய்குறு வார். 117
செய்த கொடுமை உடையான், அதன் பயம்
எய்த உரையான், இடரினால்;-எய்தி
மரிசாதியாய் இருந்த மன்று அஞ்சுவாற்குப்
பரிகாரம் யாதொன்றும் இல். 118
முதுமக்கள் அன்றி, முனி தக்கார் ஆய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம் அது-மன்னும்
குன்றத்து வீழும் கொடி அருவி நல் நாட!-
மன்றத்து மையல் சேர்ந்தற்று. 119
தருக்கி ஒழுகித் தகவு அல்ல செய்தும்,
பெருக்க மதித்தபின் பேணாத செய்தும்,
கரப்புடை உள்ளம் கனற்று பவரே-
செருப்பிடைப் பட்ட பரல். 120
உறு மக்கள் ஆக ஒருவனை நாட்டி,
பெறு மாற்றம் இன்றி, பெயர்த்தே ஒழிதல்
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை;-அதுவே,
குறுமக்கள் காவு நடல். 121
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய,
நிரை உளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்,-
வரை தாழ் இலங்கு அருவி வெற்ப!அதுவே,
சுரை ஆழ, அம்மி மிதப்பு. 122
தேர்ந்து, கண்ணோடது, தீவினையும் அஞ்சலராய்,
சேர்ந்தாரை எல்லாம் சிறிது உரைத்து, தீர்ந்த
விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும்
நரகர்கட்கு இல்லையோ நஞ்சு. 123
14. நட்பின் இயல்பு
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா,
கட்டங்கம் வெல் கொடி கொண்டானும், கொண்டானே;-
விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே,
நட்டாரை ஒட்டியுழி. 124
புரை இன்றி நட்டார்க்கு நட்டார் உரைத்த
உரையும் பொருள் முடிவும் ஒன்றால் - உரை பிறிது
கொண்டு எடுத்துக் கூறல், கொடுங் கழித் தண் சேர்ப்ப!
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று. 125
விலங்கேயும் தம்மோடு உடன் உறைதல் மேவும்;
கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா;-இலங்கு அருவி
தாஅய் இழியும் மலை நாட!-இன்னாதே,
பேஎயோ டானும் பிரிவு. 126
இனியாரை உற்ற இடர் தீர் உபாயம்
முனியார் செயினும், மொழியால் முடியா;-
துணியால் திரை உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-
பனியால் குளம் நிறைதல் இல். 127
தாம் நட்டு ஒழுகுதற்குத் தக்கார் எனல் வேண்டா;
யார் நட்பே ஆயினும், நட்புக் கொளல் வேண்டும்;-
கானாட்டு நாறும் கதுப்பினாய்!-தீற்றாதோ,
நாய், நட்டால், நல்ல முயல். 128
'தீர்ந்தேம்' எனக் கருதி, தேற்றாது ஒழுகி, தாம்
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி, சேர்ந்தார்
பழமை கந்து ஆக, பரியார், புதுமை;-
முழ நட்பின், சாண் உட்கு நன்று. 129
கொழித்துக் கொளப்பட்ட நண்பினவரைப்
பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்; என்கொல்?
விழித்து அலரும் நெய்தல் துறைவ!-உரையார்,
இழித்தக்க காணின், கனா. 130
நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட்டார்களை,
கண் கண்ட குற்றம் உள எனினும், காய்ந்தீயார்;-
பண் கொண்ட தீம் சொல் பணைத் தோளாய்!-யார் உளரோ,
தம் கன்று சாக் கறப்பார். 131
தம் தீமை இல்லாதார், நட்டவர் தீமையையும்,
'எம் தீமை' என்றே உணர்ப, தாம்;-அம் தண்
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
ஒருவர் பொறை, இருவர் நட்பு. 132
தெற்றப் பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு
உற்ற குறையை உரைப்ப, தாம்;-தெற்ற
அறை ஆர் அணி வளையாய்!-தீர்தல் உறுவார்
மறையார், மருத்துவர்க்கு நோய். 133
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண்,
அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே;-
கட்டு அலர் தார் மார்ப!-கலி ஊழிக் காலத்து,
கெட்டார்க்கு நட்டாரோ இல்! 134
15. நட்பில் விலக்கு
கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்,
எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பராய்
எண்ணி உயிர் கொள்வான் வேண்டித் திரியினும்,
உண்ணும் துணைக் காக்கும், கூற்று. 135
'எய்ப்புழி வைப்பாம்' எனப் போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலர்- பைத்தொடீஇ!
அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ,
மச்சு ஏற்றி, ஏணி களைவு. 136
பாப்புக் கொடியாற்குப் பால்மேனியான் போலத்
தாக்கி அமருள் தலைப்பெய்யார், போக்கி,
வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே-
கழி விழாத் தோள் ஏற்றுவார். 137
'இடையீடு உடையார் இவர் அவரோடு' என்று,
தலையாயார் ஆராய்ந்தும் காணார்; கடையாயர்
முன் நின்று கூறும் குறளை தெரிதலால்,-
பின் இன்னா, பேதையார் நட்பு. 138
தாம் அகத்தான் நட்டு, தமர் என்று ஒழுகியக்கால்,
நாண் அகத்துத் தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆயினென்,-
மான் மானும் கண்னால் மறந்தும் பரியலரா
கானகத்து உக்க நிலா. 139
கண்டு அறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டு அறிவார் போலாது, தாமும் அவரேபோல்,
விண்டு ஒரீஇ, மாற்றிவிடுதல்!-அது அன்றோ,
விண்டற்கு விண்டல் மருந்து. 140
பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும், சென்று,
திரிவு இன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள்
ஒருவரோடு ஒன்றி ஒருப்படா தாரே,
இரு தலைக் கொள்ளி என்பார். 141
16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல்
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை
ஓர் மூழையாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும்
கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யார்கண்ணும்
கண்டது காரணமாம் ஆறு. 142
'யாம் தீய செய்த மலை மறைத்தது' என்று எண்ணி,
தாம் தீயார் தம் தீமை தேற்றாராய் ;-ஆம்பல்
மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப!
கணையிலும் கூரியவாம் கண். 143
வெள்ளம் வருங்காலை ஈரம்பட்டு; அஃதேபோல்,
கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்;-
ஒள் அமர்க் கண்ணாய்!-ஒளிப்பினும், உள்ளம்
படர்ந்ததே கூறும், முகம். 144
நோக்கி அறிகல்லாத் தம் உறுப்பு, கண்ணாடி
நோக்கி, அறிய அதுவேபோல் - நோக்கி,
முகன் அறிவார் முன்னம் அறிய; அதுவே,
மகன் அறிவு தந்தை அறிவு. 145
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
தேரும் திறம் அரிதால்;-தேமொழி-ஆரும்
குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே,
புலப் புல வண்ணத்த, புள். 146
காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும்,
'மேய்ப்பு ஆட்டது' என்று உண்ணாள் ஆயினாள்-தீப் புகைபோல்
மஞ்சு ஆடு வெற்ப!-மறைப்பினும், ஆகாதே,
தம் சாதி மிக்குவிடும். 147
முயலவோ வேண்டா; முனிவரையானும்
இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக!-
கயல் இகல் உண் கண்ணாய்!-கரியரோ வேண்டா;
அயல் அறியா அட்டூணோ இல். 148
17. முயற்சி
'எமக்குத் துணையாவார்?' வேண்டும் என்று எண்ணி,
தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா;
பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ ? இல்லை;-
தமக்கு மருத்துவர் தாம். 149
கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;-
நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையோனே ஆயினும்,
மூத்தானே, ஆடு மகன். 150
வேளாண்மை செய்து, விருந்து ஓம்பி, வெஞ் சமத்து
வாள் ஆண்மையாலும் வலியராய், தாளாண்மை
தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார்
வாழ்க்கை திருந்துதல் இன்று. 151
'ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்'
என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்;
அன்றைப் பகலேயும் வாழ்கலார், நின்றது,
சென்றது, பேரா தவர். 152
'இனி, யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்?
தனியேம் யாம்!' என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா;
முனிவு இலராகி முயல்க!-முனிவ்஢ல்லார்
முன்னியது எய்தாமை இல். 153
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி,
மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி,
யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால்,
யாதானும் ஆகிவிடும். 154
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில்
தூங்கும் எயிலும் தொலைத்தலால், ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம்!-கூர் அம்பு
அடி இழுப்பின், இல்லை, அரண். 155
'எங்கண் ஒன்று இல்லை; எமர் இல்லை' என்று, ஒருவர்
தங்கண் அழிவு தாம் செய்யற்க!- எங்கானும்
நன்கு திரண்டு பெரயவாம், ஆற்றவும்
முன் கை நெடியார்க்குத் தோள். 156
நிலத்தின் மிகை ஆம் பெருஞ் செல்வம் வேண்டி,
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து,
நிலத்து நிலைகொள்ளாக் காலரே காணின்,
உலக்கைமேல் காக்கை என்பார். 157
தலைக்கொண்ட தம் கருமம் தாம் மடிக்கொண்டு,
கடைப்பிடி இல்லார்பால் வைத்து, கடைப்பிடி
மிக்கு ஓடி விட்டுத் திரியின், அது பெரிது
உக்கு ஓடிக் காட்டிவிடும். 158
தம்மால் முடிவதனைத் தாம் ஆற்றிச் செய்கல்லார்,
'பின்னை, ஒருவரால் செய்வித்தும்' என்று இருத்தல்,-
செல் நீர் அருவி மலை நாட!-பாய்பவோ,
வெந்நீரும் ஆடாதார் தீ. 159
'முழுதுடன் முன்னே வகுத்தவன்' என்று,
தொழுது இருந்தக் கண்ணே ஒழியுமோ, அல்லல்-
இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம்
எழுதினான் ஓலை பழுது. 160
முடிந்ததற்கு இல்லை, முயற்சி; முடியாது
ஒடிந்ததற்கு இல்லை, பெருக்கம்; வடிந்து அற
வல்லதற்கு இல்லை, வருத்தம்; உலகினுள்
இல்லதற்கு இல்லை, பெயர். 161
18. கருமம் முடித்தல்
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்,
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்,
அந் நீர் அவரவர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே-
வெந் நீரில் தண்ணீர் தெளித்து. 162
தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப் பட்டாரைத்
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப
முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே-
உண் ஓட்டு அகல் உடைப்பார். 163
புரையக் கலந்தவர் கண்ணும் கருமம்
உரையின் வழுவாது உவப்பவே கொள்க!-
வரையக நாட!-விரைவ்஢ற், கருமம்
சிதையும்; இடர் ஆய்விடும். 164
'நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர்' என்று, ஒன்று
உளைய உரையாது, உறுதியே கொள்க!-
வளை ஒலி ஐம்பாலாய்!-வாங்கியிருந்து,
தொளை எண்ணார், அப்பம் தின்பார். 165
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது-
கன்று விட்டு ஆக் கறக்கும் போழ்தில் கறவானாய்,
அம்பு விட்டு ஆக் கறக்குமாறு. 166
மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம்
முடியாத வாறே முயலும்;-கொடி அன்னாய்!-
பாரித்தவனை நலிந்து தொழில் கோடல்,
மூரி உழுது விடல். 167
ஆணியாக் கொண்ட கருமம், பதிற்றாண்டும்
பாணித்தே செய்ய, வியங்கொள்ளின் - காணி
பயவாமல் செய்வார் ஆர்? தம் சாகாடேனும்
உயவாமல் சேறலோ இல். 168
விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்,
முட்டாது அவரை வியங்கொளல் வேண்டுமால்
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்,
தட்டாமல் செல்லாது, உளி. 169
காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்து, 'அவர்
ஆக்குவர் ஆற்ற எமக்கு!' என்று அமர்ந்து இருத்தல்,-
மாப்புரை நோக்கின் மயில் அன்னாய்!-பூசையைக்
காப்பிடுதல், புன் மீன் தலை. 170
தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா
முற்றலை நாடிக் கருமம் செய வையார்
கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும்,
மற்றதன்பால் தேம்பல் நன்று. 171
உற்றான், உறாஅன், எனல் வேண்டா; ஒண் பொருளைக்
கற்றானை நோக்கியே கைவிடுக! கற்றான்
கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும்,-
இழவு அன்று, எருது உண்ட உப்பு. 172
கட்டு உடைத்தாகக் கருமம் செய வைப்பின்,
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க!-
தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை; இல்லையே,
அட்டாரை ஒட்டாக் கலம். 173
நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலர் ஆயின்,
'காட்டி, களைதும்' என வேண்டா;-ஓட்டி
இடம்பட்ட கண்ணாய்!-இறக்கும் மை ஆட்டை
உடம்படுத்து வேள்வு உண்டார் இல். 174
அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி,
இகந்துழி விட்டிருப்பின், அஃதால்-இகந்து,
நினைத்து தெரியானாய், நீள் கயத்துள், ஆமை,
'நனைந்து வா' என்று விடல். 175
உழை இருந்து, நுண்ணிய கூறி, கருமம்,
புரை இருந்தவாறு அறியான், புக்கான் விளிதல்-
நிரை இருந்து மாண்ட அரங்கினுள், வட்டு,
கரை இருந்தார்க்கு எளிய, போர். 176
19. மறை பிறர் அறியாமை
சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை
அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள்
ஊர்ந்து, உலகம் தாவிய அண்ணலேஆயினும்,
சீர்ந்தது செய்யாதார் இல். 177
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப,
உள்ள மாண்பு இல்லா ஒருவரைத் - தெள்ளி,
மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல்
பறைக்கண் கடிப்பு இடுமாறு. 178
அன்பு அறிந்தபின் அல்லால், யார் யார்க்கும், தம் மறையை
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க! - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லது, உயக் கொண்டு,
புல்வாய் வழிப்படுவார் இல். 179
நயவர நட்டு ஒழுகுவாரும் தாம், கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;-
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ!-சான்றோர்
கயவர்க்கு உரையார், மறை. 180
பெரு மலை நாட!-பிறர் அறியலாகா
அரு மறையை ஆன்றோரே காப்பர்;-அரு மறையை
நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல்
பஞ்சி வைத்து எஃகிவிட்டற்று. 181
விளிந்தாரே போலப் பிறர் ஆகி நிற்கும்
முறிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா;-
அளிந்தார்கண் ஆயினும், ஆராயான் ஆகித்
தெளிந்தான் விரைந்து கெடும். 182
20. தெரிந்து தெளிதல்
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,
மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-
தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
தா அம் தர வாரா நோய். 183
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்
இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?-
கற்பால் கலங்கு அருவி நாட!-மற்று யாரானும்
சொல் சோரா தாரோ இலர். 184
பூந்தண் புனல் புகார்ப் பூமி குறி காண்டற்கு
வேந்தர் வினாயினான், மாந்தரை - சான்றவன்,
கொண்டதனை நாணி, மறைத்தலால்,-தன் கண்ணின்
கண்டதூஉம் எண்ணிச் சொலல்! 185
ஒருவன் உணராது, உடன்று எழுந்த போருள்,
இருவரிடை நட்பான் புக்கால், பெரிய
வெறுப்பினால் பேர்த்துச் செறுப்பின், தலையுள்
குறுக் கண்ணி ஆகிவிடும். 186
எனைப் பலவே ஆயினும், சேய்த்தாப் பெறலின்,
தினைத் துணையேயானும் அணிக் கோடல் நன்றே
இனக் கலை தேன் கிழிக்கும் ஏகல் சூழ்வெற்ப!
பனைப் பதித்து, உண்ணார் பழம். 187
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார்,
கனம் கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும்;
சனங்கள் உவப்பன, செய்யாவும், செய்க!
இனம் கழு ஏற்றினார் இல். 188
கடுப்பத் தலைக் கீறி, காலும் இழந்து,
நடைத் தாரா என்பதூஉம் பட்டு, முடத்தோடு
பேர் பிறிதாகப் பெறுதலால், போகாரே-
நீர் குறிதாகப் புகல். 189
சிறிது ஆய கூழ் பெற்று, செல்வரைச் சேர்ந்தார்,
பெரிது ஆய கூழும் பெறுவர்;-அரிது ஆம்
இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால்,
கிடப்புழியும் பெற்றுவிடும். 190
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார்,
வன் சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?-
புன் சொல் இடர்படுப்பது அல்லால், ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல். 191
மெய்ந் நீரர் ஆகி விரியப் புகுவார்க்கும்,
பொய்ந் நீரர் ஆகிய பொருளை முடிப்பார்க்கும்,
எந் நீரர் ஆயினும் ஆக!-அவரவர்
தம் நீரர் ஆதல் தலை. 192
யாவரேயானும், இழந்த பொருள் உடையார்,
தேவரே ஆயினும், தீங்கு ஓர்ப்பர்;-பாவை
படத் தோன்றும் நல்லாய்!-நெடு வேல் கெடுத்தான்
குடத்துள்ளும் நாடிவிடும். 193
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு,
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி,-
அயில் போலும் கண்ணாய்!-அடைந்தார்போல் காட்டி,
மயில் போலும் கள்வர் உடைத்து. 194
செல்லற்க, சேர்ந்தார் புலம்புற! செல்லாது
நில்லற்க, நீத்தார் நெறி ஒரீஇ! பல் காலும்
நாடுக, தான் செய்த நுட்பத்தை!-கேளாதே
ஓடுக, ஊர் ஓடுமாறு! 195
21. பொருள்
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின்,
பாணித்து நிற்கிற்பார் யாவர் உளர்?-வேல் குத்திற்கு
ஆணியின் குத்தே வலிது. 196
ஒல்லாது வ்஢ன்றி, உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!-
கடலுள்ளும் காண்பவே, நன்கு. 197
அருமையுடைய பொருள் உடையார், தங்கண்
கருமம் உடையாரை நாடார்;-எருமைமேல்
நாரை துயில் வதியும் ஊர!-குளம் தொட்டு,
தேரை வழிச் சென்றார் இல். 198
அருள் உடையாரும், மற்று அல்லாதவரும்,
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;-
பொரு படைக் கண்ணாய்!-அதுவே, திரு உடையார்
பண்டம் இருவர் கொளல். 199
உடையதனைக் காப்பான் உடையான்; அதுவே
உடையானைக் காப்பதூஉம் ஆகும்;-அடையின்,
புதற்குப் புலியும் வலியே; புலிக்குப்
புதலும் வலியாய்விடும். 200


வருவாய் சிறிதுஎனினும், வைகலும் ஈண்டின்,
பெரு வாய்த்தாய் நிற்கும், பெரிதும்;-ஒருவாறு
ஒளி ஈண்டி நின்றால், உலகம் விளக்கும்;
துளி ஈண்டில், வெள்ளம் தரும். 201
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும்,
எள்ளாமை வேண்டும்;-இலங்கிழாய்!-தள்ளாது
அழுங்கல் முது பதி அங்காடி மேயும்
பழங் கன்று ஏறு ஆதலும் உண்டு. 202
களமர் பலராமனும் கள்ளம் படினும்,
வளம் மிக்கார் செல்வம் வருந்தா;-விளைநெல்
அரிநீர் அணை திறக்கும் ஊர்!-அறுமோ,
நரி நக்கிற்று என்று கடல்? 203
நாடு அறியபபட்ட பெருஞ் செல்வர், நல்கூர்ந்து
வாடிய காலத்தும், வட்குபவோ?-வாடி,
வலித்து, திரங்கி, கிடந்தேவிடினும்,
புலித் தலை நாய் மோத்தல் இல். 204
22. பொருளைப் பெறுதல்
தம் தம் பொருளும், தமர்கண் வளமையும்,
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக!-
அம் தண் அருவி மலை நாட!-சேண் நோக்கி,
நந்து, நீர் கொண்டதே போன்று! 205
மறந்தானும், தாம் உடைய தாம் போற்றின் அல்லால்,
சிறந்தார் தமர் என்று, தேற்றார் கை வையார்;-
கறங்கு நீர் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!-
இறந்தது பேர்த்து அறிவார் இல். 206
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால்,
இமையாது காப்பினும் ஆகா; இமையோரும்
அக் காலத்து ஓம்பி, அமிழ்து கோட்பட்டமையால்,
நல் காப்பின் தீச் சிறையே நன்று. 207
ஊக்கி, உழந்து, ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை,
'நோக்குமின்!' என்று, இகழ்ந்து, நொவ்வியார்கை விடுதல்,-
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழித் தண் சேர்ப்ப!-
காக்கையைக் காப்பு இட்ட சோறு. 208
தொடி முன்கை நல்லாய்!-அத் தொக்க பொருளைக்
குடிமகன் அல்லான் கை வைத்தல்,-கடி நெய்தல்
வேரி கமழும் விரி திரைத் தண் சேர்ப்ப!-
மூரியைத் தீற்றிய புல். 209
முன்னை உடையது காவாது, இகழ்ந்து இருந்து,
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல்,-இன்னியல்
மைத்தடங்கண் மாதராய் அஃதாதல், வெண்ணெய்மேல்
வைத்து, மயில் கொள்ளுமாறு. 210
'கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல்' என்பார்
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால், மெய்யா;-
மடம் பட்ட மான் நோக்கின் மா மயில் அன்னாய்!-
கடம் பெற்றான் பெற்றான் குடம். 211
கடம் கொண்ட ஒண் பொருளைக் கைவிட்டு இருப்பார்
இடம் கொண்டு, 'தம்மினே' என்றால், தொடங்கிப்
பகை மேற்கொண்டார் போல, கொண்டார் வெகுடல்,
நகை மேலும் கைப்பாய் விடும். 212
23. நன்றியில் செல்வம்
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன
ஆவதே போன்று கெடும். 213
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல்,-இன் ஒலி நீர்
கல் மேல் இலங்கு மலை நாட!-மாக் காய்த்துத்
தன்மேல் குணில் கொள்ளுமாறு. 214
பெற்றாலும் செல்வம், பிறர்க்கு ஈயார், தாம் துவ்வார்,
கற்றாரும் பற்றி இறுகுபவால்;-கற்றா
வரம்பிடைப் பூ மேயும் வண் புனல் ஊர!-
மரம் குறைப்ப மண்ணா, மயிர். 215
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம்,-தழங்கு அருவி
வேய் முற்றி முத்து உதிரும் வெற்ப!-அது அன்றோ,
நாய் பெற்ற தெங்கம்பழம். 216
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவு ஊரில் கூத்தேபோல் வீழ்ந்து அவிதல் கண்டும்,
'இழவு' என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம்,
அழகொடு கண்ணின் இழவு. 217
நாவின் இரந்தார் குறை அறிந்தும் தாம் உடைய
மாவினை மாணப் பொதிகிற்பார், தீவினை
அஞ்சில் என்? அஞ்சாவிடில் என்?-குருட்டுக் கண்
துஞ்சில் என்? துஞ்சாக்கால் என்? 218
படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார், பொருளைத்
தொடரும் தம் பற்றினால் வைத்து, இறப்பாரே,-
அடரும், பொழுதின்கண், இட்டு, குடர் ஒழிய,
மீ வேலி போக்குபவர். 219
விரும்பி அடைந்தார்க்கும், சுற்றத்தவர்க்கும்,
வருந்தும் பசி களையார், வம்பர்க்கு உதவல்,-
இரும் பணை வில் வென்ற புருவத்தாய்!-ஆற்றக்
கரும் பனை அன்னது உடைத்து. 220
வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார்,
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார்,
இழந்தது இல் செல்வம் பெறுதல்,-அதுவே
பழஞ் செய் போர்பு ஈன்று விடல். 221
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின்,
நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க,
வற்கென்ற செய்கை அதுவால்-அவ் வாயுறைப்
புல் கழுத்தில் யாத்துவிடல். 222
அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால்,
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்,-படை வென்று
அடைய அமர்த்த கண் ஆயிழாய்!-அஃதால்,
இடையன் எறிந்த மரம். 223
மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்று
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை;-குரங்கு ஊசல்
வள்ளியின் ஆடும் மலை நாட!-அஃது அன்றோ,
பள்ளியுள் ஐயம் புகல். 224
இசைவ கொடுப்பதூஉம், 'இல்' என்பதூஉம்,
வசை அன்று; வையத்து இயற்கை; அஃது அன்றி,
பசை கொண்டவன் நிற்க, பாத்து உண்ணான் ஆயின்,
நசை கொன்றான் செல் உலகம் இல். 225
தமராலும் தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி,
நிகராகச் சென்றாரும் அல்லர்;-இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப!-செய்தது உவவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு. 226
24. ஊழ்
எவ்வம் துணையாப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-
பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர்!-குறும்பு, இயங்கும்
கோப்புக்குழி, செய்வது இல். 227
சுட்டிச் சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும்,
பட்ட விருத்தம் பலவானால், பட்ட
பொறியின் வகைய, கருமம் அதனால்,-
அறிவினை ஊழே அடும். 228
அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும், தீங்குறுதல் காண்டுமால்;-பொங்கி,
அறைப் பாய் அருவி அணி மலை நாட!-
உறற்பால யார்க்கும் உறும். 229
கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென்றதனால், விழுமிய
வேண்டினும், வேண்டாவிடினும், உறற்பால
தீண்டா விடுதல் அரிது. 230
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை,
ஏஎய், இரவு எல்லாம் காத்தாலும், வாஅய்ப்
படற்பாலார்கண்ணே, படுமே பொறியும்-
தொடற்பாலார்கண்ணே தொடும். 231
முன் பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார்,
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு
இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?-
முதல் இலார்க்கு ஊதியம் இல். 232
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை
நல் நாளே நாடி மலர்தலால்,-மன்னர்
உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம்
தொகற்பால போழ்தே தொகும். 233
குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு,
புரைத்து எழுந்து போகினும் போவர்; அரக்கு இல்லுள்
பொய் அற்ற ஐவரும் போயினார்;-இல்லையே,
உய்வதற்கு உய்யா இடம். 234
'இது மன்னும் தீது' என்று இயைந்ததூஉம், ஆவார்க்கு
அது மன்னும் நல்லதே ஆகும்;-மது மன்னும்
வீ நாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப!-
தீ நாள் திரு உடையார்க்கு இல். 235
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும்,
வீற்று வழி அல்லால், வேண்டினும், கைகூடா;
தேற்றார் சிறியர் எனல் வேண்டா;-நோற்றார்க்குச்
சோற்றுள்ளும் வீழும் கறி. 236
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்;
போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே;-
ஏ கல் மலை நாட!-என் செய்து, ஆங்கு என் பெறினும்,
ஆகாதார்க்கு ஆகுவது இல். 237
'பண்டு உருத்துச் செய்த பழ வினை வந்து, எம்மை
இன்று ஒறுக்கின்றது' என வறியார், துன்புறுக்கும்
மேவலரை நோவது என்?-மின் நேர் மருங்குலாய்!-
ஏவலாள் ஊரும் சுடும். 238
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்,
பிடர்த்தலைப் பேரானைப் பெற்று, கடைக்கால்,
செயிர் அறு செங்கோல் செலீஇயினான்;-இல்லை,
உயிர் உடையார் எய்தா வினை. 239
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால், தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார்;-பனி அஞ்சி,
வேழம் பிடி தழூஉம், வேய் சூழ், மலை நாட!-
ஊழ் அம்பு வீழா, நிலத்து. 240
25. அரசியல்பு
'எம் கண் இனையர்' எனக் கருதின், ஏதமால்;
தங்கண்ணேரானும் தகவு இல கண்டக்கால்,
வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான், அரசு. 241
சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப,
காலை கழிந்ததன் பின்றையும், மேலைக்
கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;-
முறைமைக்கு மூப்பு இளமை இல். 242
முறை தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும்,
இறை, திரியான் நேர் ஒத்தல் வேண்டும்; முறை திரிந்து
நேர் ஒழுகான் ஆயின், அதுவாம்,-ஒரு பக்கம்
நீர் ஒழுக, பால் ஒழுகுமாறு. 243
பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர்
அருத்தம், அடி நிழலாரை வருத்தாது,
கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ,
வண்டு தாது உண்டுவிடல். 244
பாற்பட்டு வாழ்ப எனினும், குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிக நிற்றல் வேண்டாவாம்
கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால்,
பால் தலைப் பால் ஊறல் இல். 245
அடைய அடைந்தாரை அல்லவை செய்து,
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல்
கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ,
சூட்டு அறுத்து வாயில் இடல். 246
வெண்குடைக்கீழட வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லனேல், செய்வது என்?-பொங்கு
படு திரைச் சேர்ப்ப!-மற்று இல்லையே, யானை
தொடு உண்ணின், மூடும் கலம். 247
ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்,
களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதும்;
துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும்,
எளியாரை எள்ளாதார் இல். 248
மறு மனத்தன் அல்லாத மா நலத்த வேந்தன்
உறு மனத்தன் ஆகி ஒழுகின்,-செறு மனத்தார்
பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?-
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல். 249
அம் கோல் அவிர்தொடி!-ஆழியான் ஆயினும்,
செங்கோலன் அல்லாக்கால், சேர்ந்தாரும் எள்ளுவரால்,
வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிது எனினும்;
தண் கோல் எடுப்புமாம் மொய். 250
மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப?-புன்னைப்
பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!-
மரத்தின் கீழ் ஆகா, மரம். 251
வழிப்பட்டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும்;-விழுத்தக்க
பையமர் மாலைப் பணைத் தோளாய்!-பாத்து அறிவு என்,
மெல்ல கவுள் கொண்ட நீர். 252
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர் செய்திருத்தல்,-மலைமிசைக்
காம்பு அனுக்கும் மென் தோளாய்!-அஃதுஅன்றோ, ஓர் அறையுள்
பாம்பொடு உடன் உறையுமாறு. 253
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து, குறிப்பு அறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது; ஆற்றவும்,-
முல்லை புரையும் முறுவலாய்!-செய்வது என்,
வல்லை, அரசு ஆட்கொளின்? 254
உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை,
அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி, நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல்-குரங்கின் கைக்
கொள்ளி கொடுத்துவிடல். 255
எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும்,
ஒல்லை வெகுளார், 'உலகு ஆண்டும்!' என்பவர்;
சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே,
கொல்லையுள் கூழ்-மரமே போன்று. 256
பொலந் தார் இராமன் துணையாகப் தான்போந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
போந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல். 257
26. அமைச்சர்
கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,
தலைப்பாய் இழிதரூஉம் தண் புனல் நீத்தம்
மலைப் பெயல் காட்டும் துணை. 258
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை
பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும்
செவ்வாய் முறுவல் நற்சின்மொழியாய்!-செய்தானை
ஒவ்வாத பாவையோ இல். 259
கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்று இடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட
சுரையாழ் நரம்பறுத் தற்று. 260
நல்லவும் தீயவும் நாடி, பிறர் உரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரை, கட்டுரையின்
வல்லிதின் நாடி, வலிப்பதே-புல்லத்தைப்
புல்லம் புறம் புல்லுமாறு. 261
மனத்தினும், வாயினும், மெய்யினும், செய்கை
அனைத்தினும், ஆன்று அவிந்தார் ஆகி, நினைத்திருந்து,
ஒன்றும் பரியலராய், ஓம்புவார் இல் எனில்,
சென்று படுமாம், உயிர். 262
செயல் வேண்டா நல்லன செய்விக்கும்; தீய
செயல் வேண்டி நிற்பின், விலக்கும்; இகல் வேந்தன்-
தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்,-
முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல். 263
செறிவுடைத் தார் வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவு உடையார் அவ்வியமும் செய்வர்;-வறிது உரைத்து,
பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல்,
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது. 264
தீயன அல்ல செயினும், திறல் வேந்தன்
காய்வன செய்து ஒழுகார், கற்று அறிந்தார்;-காயும்
புலி முன்னம் புல்வாய்க்குப் போக்கு இல்; அதுவே,
வலி முன்னர் வைப் பாரம் இல். 265
27. மன்னரைச் சேர்ந்தொழுகல்
கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
எடுத்து மேற்கொண்டவர் ஏய வினையை
மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக்
குடித்துக் குழைவாரோ இல். 266
வெற்றி வேல் வேந்தன் வியங்கொண்டல், 'யாம் ஒன்றும்
பெற்றிலேம்' என்பது பேதைமையே; மற்று அதனை
எவ்வம் இலர் ஆகிச் செய்க!-அது அன்றோ,
'செய்க!' என்றான், 'உண்க!' என்னுமாறு. 267
'எமர் இது செய்க, எமக்கு!' என்று, வேந்தன்
தமரைத் தலைவைத்த காலை, தமர் அவற்கு
வேலின்வாய் ஆயினும்,வீழார்; மறுத்து உரைப்பின்,-
'ஆல்' என்னின் 'பூல்' என்னுமாறு. 268
விடலைமை செய்ய வெருண்டு அகன்று, நில்லாது,
உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்,-
மடல் அணி பெண்ணை மலி திரைச் சேர்ப்ப!-
கடல் படா எல்லாம் படும். 269
உவப்ப உடனபடுத்தற்கு ஏய கருமம்
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி, பயத்தால்,
வினை முதிரின் செய்தான்மேல் ஏறும்;-பனை முதிரின்,
தாய் தாள்மேல் வீழ்ந்துவிடும். 270
செருக் கெழு மன்னர்த் திறல் உடையார் சேர்ந்தார்,
ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ ?-
உருத்த சுணங்கின் ஒளியிழாய்!-கூரிது,
எருத்து வலியநன் கொம்பு. 271
வேந்தன் மதித்து உணரப்பட்டாரைக் கொண்டு, ஏனை
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப;-ஆய்ந்த
நல மென் கதுப்பினாய்!-நாடின் நெய் பெய்த
கலமே நெய் பெய்துவிடும். 272
ஆண்தகை மன்னரைச் சேர்ந்தார் தாம் அலவுறினும்,
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க!-
பூண்டாங்கு மார்ப!-பொருள் தக்கார் வேண்டாமை
வேண்டியது எல்லாம் தரும். 273
காவலனை ஆக வழிபட்டார், மற்று அவன்
ஏவல் வினை செய்திருந்தார்க்கு உதவு அடுத்தல்-
ஆ அணைய நின்றதன் கன்று, முலை இருப்ப,
தாய் அணல் தான் சுவைத்தற்று. 274
சிறப்புடை மன்னரைச் செவ்வியான் நோக்கி,
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை;
விறற் புகழ் மன்னர்க்கு உயிர் அன்னரேனும்,
புறத்து அமைச்சின், நன்று, அகத்துக் கூன். 275
இடு குடைத் தேர் மன்னர், 'எமக்கு அமையும்' என்று,
கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு,
முடிதல் எனைத்தும் உணரா முயறல்,-
கடிய கனைத்துவிடல். 276
சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும்,
நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி;-சீர்த்த
கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக்கண்ணும்,
இளைத்து அன்று பாம்பு இகழ்வார் இல். 277
செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள்
ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத்
திருத்தலும் ஆகாது, தீதரம்;-அதுவே
எருத்திடை வைக்கோல் தினல். 278
பல் நாள் தொழில் செய்து, உடைய கவர்ந்து உண்டார்,
இன்னாத செய்யாமை வேண்டி, இறைவர்க்குப்
பொன் யாத்துக் கொண்டு புகுதல்,-குவளையைத்
தன் நாரால் யாத்துவிடல். 279
மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர்,
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி,
பொய்ம் மேலே கொண்டு அவ் இறைவற் கொன்றார்-குறைப்பர்,
தம் மேலே வீழப் பனை. 280
வெஞ் சின மன்னவன் வேண்டாத செய்யினும்,
நெஞ்சத்துக் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;-
என் செய்து அகப்பட்டக் கண்ணும், எடுப்புபவோ,
துஞ்சு புலியைத் துயில்? 281
தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார்,
வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?-
ஆமா உகளும் அணி வரை வெற்ப!-கேள்;
ஏமாரார் கோங்கு ஏறினார். 282
உறாஅ வகையது செய்தாரை, வேந்தன்,
பொறாஅன் போல, பொறுத்தால், பொறாஅமை
மேன்மேலும் செய்து விடுதல்,-அது அன்றோ,
கூன்மேல் எழுந்த குரு. 283
பொருள் அல்லார் கூறிய பொய்க் குறளை வேந்தன்
தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து,
ஆடுபவரோடே ஆடார், உணர்வு உடையார்-
ஆடு பணைப் பொய்க் காலே போன்று. 284
28. பகைத்திறம் தெரிதல்
வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?-
மஞ்சு சூழ் சோலை மலை நாட!-யார்க்கானும்
அஞ்சுவார்க்கு இல்லை, அரண். 285
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே
கதித்துக் களையின் முதிராது எதிர்த்து,
நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீரத்
தனி மரம் காடு ஆவது இல். 286
'முன் நலிந்து, ஆற்ற முரண் கொண்டு எழுந்தோரைப்
பின் நலிதும்' என்று இருத்தல் பேதைமையே; பின் சென்று,-
காம்பு அன்ன தோளி!-கடிதிற் கடித்து ஓடும்
பாம்பின் பல் கொள்வாரோ இல். 287
நிரம்ப நிரையத்தைக் கண்டதும் நிரையும்
வரம்பு இல் பெரியானும் புக்கான்; இரங்கார்,-
கொடி ஆர மார்ப!-குடி கெட வந்தால்,
அடி கெட மன்றி விடல். 288
தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும்
சுவர் நிலம் செய்து அமைத்துக் கூட்டியக் கண்ணும்
உவர் நிலம் உட்கொதிக்குமாறு. 289
முகம் புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை,
'அகம் புகுதும்!' என்று இரக்கும் ஆசை-இருங் கடத்துத்
தக்க நெறியிடைப் பின்னும் செலப் பெறார்
ஒக்கலை வேண்டி அழல். 290
ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க!
போற்றாது கொண்டு அரக்கன் போருள் அகப்பட்டான்
நோற்ற பெருமை உடையாரும், கூற்றம்
புறம் கொம்மை கொட்டினார் இல். 291
பெரியாரைச் சார்ந்தார்மேல், பேதைமை கந்தா,
சிறியார் முரண் கொண்டு ஒழுகல், வெறி ஒலிக்கு
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப!-புலம் புகின்,
தீ நாய் எடுப்புமாம் எண்கு. 292
இகலின் வலியாரை எள்ளி, எளியார்,
இகலின் எதிர் நிற்றல் ஏதம்;-அகலப் போய்,
என் செய்தே ஆயினும் உய்ந் தீக!-சாவாதான்
முன்கை வளையும் தொடும். 293
வென்று அடுகிற்பாரை வெப்பித்து, அவர் காய்வது
ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல்-
குன்றொடு தேன் கலாம் வெற்ப!-அது பெரிதும்
நன்றொடு வந்தது ஒன்று அன்று. 294
'உரைத்தவர் நாவோ பருந்து எறியாது' என்று,
சிலைத்து எழுந்து, செம்மாப்பவரே-மலைத்தால்,
இழைத்தது இகவாதவரைக் கனற்றி,
பலிப் புறத்து உண்பர் உணா. 295
தழங்குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால்,
கிழங்குடைய எல்லாம் முளைக்கும், ஓர் ஆற்றால்
விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டு ஒழுகல் வேண்டா;-
பழம் பகை நட்பு ஆதல் இல். 296
வெள்ளம் பகை யெனினும், வேறு இடத்தார் செய்வது என்?
கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு-
புள் ஒலிப் பொய்கைப் புனல் ஊர!-அஃது அன்றோ,
அள் இல்லத்து உண்ட தனிசு. 297
இம்மைப் பழியும், மறுமைக்குப் பாவமும்,
தம்மைப் பிரியார் தமரா அடைந்தாரின்,
செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ?-
மைம்மைப்பின் நன்று, குருடு. 298
பொருந்தா தவரைப் பொருது அட்டக் கண்ணும்,
இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்,-
விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப!-அதுவே,
அரிந்து அரிகால் நீர்ப் படுக்குமாறு. 299
வன் பாட்டவர் பகை கொள்ளினும், மேலாயார்,
புன் பாட்டவர் பகை கோடல் பயன் இன்றே;-
கண் பாட்ட பூங் காவிக் கானல் அம் தண் சேர்ப்ப!-
வெண் பாட்டம் வெள்ளம் தரும். 300

வாள் திறலானை வளைத்தார்கள், அஞ் ஞான்று,
வீட்டிய சென்றார், விளங்கு ஒளி காட்ட,
பொறுவரு தன்மை கண்டு, அஃது ஒழிந்தார்;-அஃதால்,
உருவு திரு ஊட்டுமாறு. 301
வலியாரைக் கண்டக்கால் வாய் வாளார் ஆகி,
மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை,-
புலி கலாம் கொள் யானைப் பூங் குன்ற நாட!-
வலி அலாம் தாக்கு வலிது. 302
ஒன்னார் அட நின்ற போழ்தின், ஒரு மகன்
தன்னை எனைத்தும் வியவற்க! துன்னினார்
நன்மை இலராய்விடினும், நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல். 303
தன் நலிகிற்பான் தலை வரின், தான் அவற்குப்
பின், நலிவானைப் பெறல் வேண்டும்-என்னதூஉம்
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே,
நாய் பின்னதாகத் தகர். 304
யானும் மற்று இவ் இருந்த எம் முன்னும், ஆயக்கால்,
ஈனம் செயக் கிடந்தது இல் என்று, கூனல்
படை மாறு கொள்ளப் பகை தூண்டல் அஃதே-
இடை நாய்க்கு எலும்பு இடுமாறு. 305
இயல் பகை வெல்குறுவான், ஏமாப்ப முன்னே
அயல் பகை தூண்டி விடுத்து, ஓர் நயத்தால்
கறு வழங்கி, கைக்கு எளிதாச் செய்க! அதுவே
சிறு குரங்கின் கையால் துழா. 306
மாற்றத்தை மாற்றம் உடைத்தலால், மற்றவர்க்கு
ஆற்றும் பகையால் அவர்க் களைய வேண்டுமே,
வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான்;-ஆற்றுவான்
நூற்றுவரைக் கொண்டுவிடும். 307
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு
உள் வாழ் பகையைப் பெறுதல் உறுதியே;
கள்ளினால் கள் அறுத்தல் காண்டும்; அது அன்றோ,
முள்ளினால் முள் களையும் ஆறு. 308
நலிந்து ஒருவர் நாளும் அடுபாக்குப் புக்கால்,
மெலிந்து ஒருவர் வீழாமை கண்டு, மலிந்து அடைதல்,-
பூப் பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய்!-
ஏப் பிழைத்துக் காக் கொள்ளுமாறு. 309
மறையாது இனிது உரைத்தல், மாண் பொருள் ஈதல்,
அறையான் அகப்படுத்துக் கோடல், முறையால்
நடுவணாச் சென்று அவரை நன்கு எறிதல், அல்லால்,
ஒடி எறியத் தீரா, பகை. 310
29. படைவீரர்
தூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துத்
தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல்
யாப்பினுள் அட்டிய நீர். 311
உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான்,
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா,
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர். 312
ஆற்ற வினை செய்தார் நிற்ப, பல உரைத்து,
ஆற்றாதார் வேந்தனை நோவது-சேற்றுள்
வழாஅமைக் காத்து ஓம்பி வாங்கும் எருத்தும்
எழாஅமைச் சாக்காடு எழல். 313
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால்,
'போர் ஏற்றும்' என்பார், பொது ஆக்கல் வேண்டுமோ?
யார் மேற்றாக் கொள்ளினும் கொண்டீக! காணுங்கால்,
ஊர் மேற்று, அமணர்க்கும் ஓடு. 314
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்,
தம்மேல் புகழ் பிறர் பாராட்ட, தம்மேல் தாம்
வீரம் சொல்லாமையே வீழ்க!-களிப்பினும்
சோரப் பொதியாத வாறு. 315
உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம்,-பல்லி
நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னைப்
பொரிப்பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர்ச் சேர்ப்ப!-
நரிக் கூக் கடற்கு எய்தாவாறு. 316
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவாரேனும்,
நிகர் அன்றிமேல் விடுதல் ஏதம்;-நிகர் இன்றி
வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய்!-அஃது அன்றோ,
கல்லொடு கை எறியுமாறு. 317
'வரை புரை வேழத்த, வன் பகை' என்று அஞ்சா
உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள்,
நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!-
திரை அவித்து, ஆடார் கடல். 318
காத்து, ஆற்றுகிற்பாரைக் கண்டால், எதிர் உரையார்,
பார்த்து ஆற்றாதாரைப் பரியாது மீதூர்தல்
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை-நாவிதன் வாள்
சேப்பிலைக்குக் கூர்த்து விடல். 319
இஞ்சி அடைத்துவைத்து, ஏமாந்து இருப்பினும்,
அஞ்சி அகப்படுவார், ஆற்றாதார்;-அஞ்சி
இருள் புக்கு இருப்பினும், மெய்யே வெரூஉம், புள்
இருளின் இருந்தும் வெளி. 320
உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய,
செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போல,
தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே-
கருக்கினால் கூறை கொள்வார். 321
'அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார்
எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்' என்று,
தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அதுவே-
மகன் மறையாத் தாய் வாழுமாறு. 322
உறுகண் பலவும் உணராமை கந்தா,
தறுகண்மை ஆகாதாம் பேதை, 'தறுகண்
பொறிப் பட்ட ஆறு அல்லால், பூணாது' என்று எண்ணி,
அறிவு அச்சம் ஆற்றப் பெரிது. 323
தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாதான்,
என்ன குறையன், இளையரால்?-மன்னும்
புலியின் பெருந் திறல ஆயினும், பூசை,
எலி இல்வழிப் பெறா, பால். 324
கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,
உடையர் எனப்பட்டு ஒழுகி, பகைவர்
உடைய, மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின், படைத் தகைமை நன்று. 325
இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன்,
'தருக!' என்றால் தன்னையரும் நேரார்; செரு அறைந்து,
பாழித் தோள் வட்டித்தார்; காண்பாம்; இனிது அல்லால்,
வாழைக்காய் உப்பு உறைத்தல் இல். 326
30. இல்வாழ்க்கை
நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய
ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்!-
வித்து இன்றிச் சம்பிரதம் இல். 327
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு,
பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
தாம் பெற்றதனால், உவவார்; பெரிது அகழின்,
பாம்பு காண்பாரும் உடைத்து. 328
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும்,
புறத்தால் பொலிவுறல் வேண்டும்;-எனைத்தும்
படுக்கை இலராயக்கண்ணும், உடுத்தாரை
உண்டி வினவுவார் இல். 329
சொல்லாமை நோக்கிக் குறிப்பு அறியும் பண்பின் தம்
இல்லாளே வந்த விருந்து ஓம்பி, செல்வத்து
இடர் இன்றி ஏமாந்திருந்தாரே, நாளும்
கடலுள் துலாம் பண்ணினார். 330
எந் நெறியானும் இறைவன் தன் மக்களைச்
செந் நெறிமேல் நிற்பச் செயல் வேண்டும்; அந் நெறி-
மான் சேர்ந்த நோக்கினாய்!-ஆங்க; அணங்கு ஆகும்,
தான் செய்த பாவை தனக்கு. 331
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண்
பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;-
மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்கு
மக்களுள் பக்கமோ வேறு. 332
தொடித் தோள் மடவார் மருமந்தன் ஆகம்
மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
நெறி அல்ல சொல்லல் நீ, பாண!-அறி துயில்
ஆர்க்கும் எடுப்பல் அரிது. 333
விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம்
கெழுமிய நாணை மறைக்கும்; தொழுதையுள்,
மாலையும் மாலை மறுக்குறுத்தாள்;-அஃதால்,
சால்பினைச் சால்பு அறுக்குமாறு. 334
தூய்மை மனத்தவர், தோழர் மனையகத்தும்,
தாமே தமியர் புகல் வேண்டா; தீமையான்
ஊர் மிகின், இல்லை, கரியோ;-ஒலித்து உடன்
நீர் மிகின், இல்லை, சிறை. 335
நிறையான் மிகுகல்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா; அறையோ-
வருந்த வலிதினின் யாப்பினும், நாய் வால்
திருந்துதல் என்றுமோ இல். 336
நல்கூர்ந்தவர்க்கு, நனி பெரியர் ஆயினார்,
செல் விருந்து ஆகிச் செலல் வேண்டா, ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம்-குருவி
குறங்கு அறுப்பச் சோரும் குடர். 337
உடுக்கை, மருந்து, உறையுள், உண்டியோடு, இன்ன
கொடுத்து, குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து, இன்சொல்
ஈயாமை என்ப-எருமை எறிந்து, ஒருவர்
காயக்கு உலோபிக்குமாறு. 338
தத்தமக்குக் கொண்ட குறியே தவம் அல்ல;
செத்துக! சாந்து படுக்க! மனம் ஒத்துச்
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே-
நுகத்துப் பகல் ஆணி போன்று. 339
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்,
கொள்ளும் பொழுதே கொடுக்க, தாம் கொள்ளார்;
'நிலைப் பொருள்' என்று அதனை நீட்டித்தல் வேண்டா;-
புலைப் பொருள் தங்கா, வெளி. 340
நன்றே, ஒருவர்த் துணையுடைமை; பாப்பு இடுக்கண்
நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்,-விண் தோயும்
குன்றகல் நல் நாட!-கூறுங்கால், இல்லையே,
ஒன்றுக்கு உதவாத ஒன்று. 341
விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி,
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார், இடர் உடைத்தாய்ப்
பெற்ற விடக்கு நுகர்தல்,-கடல் நீந்தி,
கற்று அடியுள் ஆழ்ந்துவிடல். 342
செறலின் கொலை புரிந்து, சேண் உவப்பர் ஆகி,
அறிவின் அருள் புரிந்து செல்லார், பிறிதின்
உயிர் செகுத்து, ஊன் துய்த்து, ஒழுகுதல்-ஓம்பார்,
தயிர் சிதைத்து, மற்றொன்று அடல். 343
நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்கு
என்றும் உறுதியே சூழ்க!-எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப!-அது போல, நீர் போயும்,
ஒன்று இரண்டாம் வாணிகம் இல். 344
'தமன்' என்று இரு நாழி ஈத்தவன் அல்லால்,
'நமன்' என்று, காயினும், தான் காயான், மன்னே,
'அவன் இவன்' என்று உரைத்து எள்ளி;-மற்று யாரே,
நம நெய்யை நக்குபவர்? 345
நாடி, 'நமர்' என்று நன்கு புரந்தாரைக்
கேடு பிறரோடு சூழ்தல்,-கிளர் மணி
நீடு அகல் வெற்ப!-நினைப்பு இன்றி, தாம் இருந்த
கோடு குறைத்து விடல். 346
'பண்டு இன்னார்' என்று தமரையும், தம்மையும்,
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால்,
விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின்,-அஃது அன்றோ,
உண்ட இல் தீ இடுமாறு. 347
31. உறவினர்
தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?-
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!-
உமிக் குற்றுக் கை வருந்துமாறு. 348
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப் பட்டவர்
தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்தவர்க்குச்
செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?-
எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய். 349
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்று அவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார், நல்ல
வினை மரபின், மற்று அதனை நீக்குமதுவே
மனை மரம் ஆய மருந்து. 350
மெய்யா உணரின், பிறர் பிறர்க்குச் செய்வது என்?-
மை ஆர் இருங்கூந்தல் பைந்தொடி!-எக்காலும்
செய்யார் எனினும், தமர் செய்வர்; பெய்யுமாம்,
பெய்யாது எனினும், மழை. 351
முன் இன்னார் ஆயினும், மூடும் இடர் வந்தால்,
பின் இன்னார் ஆகிப் பிரியார், ஒரு குடியார்;
பொன்னாச் செயினும், புகாஅர்-புனல் ஊர!-
துன்னினார் அல்லர், பிறர். 352
உளைய உரைத்து விடினும், உறுதி
கிளைகள் வாய்க் கேட்பது நன்றே;-விளை வயலுள்
பூ மிதித்துப் புள் கலாம் பொய்கைப் புனல் ஊர!-
தாய் மிதித்த ஆகா முடம். 353
தன்னை மதித்து, தமர் என்று கொண்டக்கால்,
என்ன படினும், அவர் செய்வ செய்வதே;-
இன் ஒலி வெற்ப!-இடர் என்னை? துன்னூசி
போம் வழிப் போகும், இழை. 354
கருவினுள் கொண்டு கலந்தாரும், தம்முள்
ஒருவழி நீடும் உறைதலோ, துன்பம்;-
பொரு கடல் தண் சேர்ப்ப!-பூந் தாமரைமேல்
திருவொடும் இன்னாது, துச்சு. 355
பாரதத் துள்ளும், பணையம் தம் தாயமா,
ஈர்-ஐம்பதின்மரும் போர் எதிர்ந்து, ஐவரொடு
ஏதிலர் ஆகி, இடை விண்டார்; ஆதலால்,
காதலரொடு ஆடார் கவறு. 356
32. அறம் செய்தல்
சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
அறம் செய்து அருள் உடையர் ஆதல்,-பிறங்கல்
அமையொடு வேய் கலாம் வெற்ப!-அதுவே,
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு. 357
வைத்தனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத்
துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத்
தக்குழி நோக்கி, அறம் செய்யின்-அஃது அன்றோ,
எய்ப்பினில் வைப்பு என்பது. 358
மல்லல் பெருஞ் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்,
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்;-மெல் இயல்,
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்!-பைங் கரும்பு
மென்றிருந்து, பாகு செயல். 359
ஈனுலகத்துஆயின், இசை பெறு஡உம்; அஃது இறந்து,
ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன்
நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்
வேள் வாய் கவட்டை நெறி. 360
மாய்வதன் முன்னே, வகைப்பட்ட நல் வினையை
ஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து,
நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை,
நாய் காணின் கல் காணாவாறு. 361
தக்கம் இல் செய்கைப் பொருள் பெற்றால், அப்பொருள்
தொக்க வகையும் முதலும் அது ஆனால்,
'மிக்க வகையால் அறம் செய்!' என, வெகுடல்,-
அக்காரம் பால் செருக்குமாறு. 362
உலப்பு இல் உலகத்து உறுதியை நோக்கிக்
குலைத்து அடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்-
மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப் பால் பெய்துவிடல். 363
அறம் செய்பவர்க்கும், அறவுழி நோக்கி,
திறம் தெரிந்து செய்தக்கால், செல்வுழி நன்று ஆம்;-
புறம் செய்ய, செல்வம் பெருகும்; அறம் செய்ய,
அல்லவை நீங்கி விடும். 364
தோற்றம் அரிது ஆய மக்கட் பிறப்பினால்,
ஆற்றும் துணையும் அறம் செய்க!-மாற்று இன்றி,
அஞ்சும் பிணி, மூப்பு, அருங் கூற்றுடன் இயைந்து,
துஞ்சு வருமே, துயக்கு! 365
பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
கட்டு உடைத்தாகக் கருதிய நல்லறம்,
முட்டு உடைத்தாகி, இடை தவிர்ந்து வீழ்தலின்,
நட்டு அறான் ஆதலே நன்று. 366
பல நாளும் ஆற்றார் எனினும், அறத்தைச்
சில நாள் சிறந்தவற்றால் செய்க!-கலை தாங்கி
நைவது போலும் நுசுப்பினாய்!-நல்லறம்
செய்வது செய்யாது, கேள். 367
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண்,
நோக்கப் படினும், உணங்கலைப் புள் கவரும்;-
போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண் பொருட்கும்
காப்பாரின் பார்ப்பார் மிகும். 368
இன்றி அமையா இரு முது மக்களைப்
பொன்றினமை கண்டும், பொருள் பொருளாக் கொள்பவோ?
ஒன்றும் வகையான் அறம் செய்க! ஊர்ந்து உருளின்
குன்று, வழி அடுப்பது இல். 369
அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்ற
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்-
முயல் விட்டுக் காக்கை தினல். 370
இம்மைத் தவமும், அறமும், என இரண்டும்,
தம்மை உடையார் அவற்றைச் சலம் ஒழுகல்,
இம்மைப் பழி ஏயும்; அன்றி, மறுமையும்,
தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு. 371
33. ஈகை
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
பெரிய பொருள் கருது வாரே;-விரி பூ
விராஅம் புனல் ஊர!-வேண்டு அயிரை இட்டு,
வராஅஅல் வாங்குபவர். 372
கரப்புடையார் வைத்த, கடையும் உதவா,
துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால்,
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்-
சுரத்திடைப் பெய்த பெயல். 373
பல் ஆண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், வல்லே
வளம் நெடிது கொண்து அறாஅது;-அறுமோ,
குளம் நெடிது கொண்டது நீர்? 374
'நினைத்தது இது' என்று, அந் நீர்மையை நோக்கி,
மனத்தது அறிந்து ஈவார் மாண்டார்;-புனத்த
குடிஞை இரட்டும் குளிர் வரை நாட!-
கடிஞையில் கல் இடுவார் இல். 375
கூஉய்க் கொடுப்பது ஒன்று இல் எனினும், சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரே துன்பம் துடைக்கிற்பார்;-
வாய்ப்பத் தான் வாடியக் கண்ணும், பெருங் குதிரை,
யாப்புள், வேறு ஆகிவிடும். 376
அடுத்து ஒன்று இரந்தாற்கு ஒன்று ஈந்தாரை, கொண்டார்,
படுத்து, 'ஏழையாம்!' என்று போகினும் போக!-
அடுத்து ஏறு அல் ஐம்பாலாய்!-யாவர்க்கேயானும்
கொடுத்து, ஏழை ஆயினார் இல். 377
'இரப்பவர்க்கு ஈயக் குறைபடும்' என்று எண்ணி,
கரப்பவர் கண்டறியார்கொல்லோ?-பரப்பில்
துறைத் தோணி நின்று உலாம் தூங்கு நீர்ச் சேர்ப்ப!-
இறைத்தோறும் ஊறும் கிணறு. 378
'இரவலர் தம் வரிசை' என்பார், மடவார்
கரவலராய்க் கை வண்மை பூண்ட புரவலர்
சீர வரைய ஆகுமாம், செய்கை சிறந்து அனைத்தும்;-
நீர் வரையவாம் நீர் மலர். 379
தொடுத்த பெரும் புலவன், சொற் குறை தீர,
'அடுத்தர' என்றாற்கு, 'வாழியரோ!' என்றான்;
தொடுத்து, 'இன்னர்' என்னலோ வேண்டா;-கொடுப்பவர்
தாம் அறிவார், தம் சீர் அளவு. 380
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும்,
பாரி மட மகள், பாண் மகற்கு, நீர் உலையுள்
பொன், திறந்து, கொண்டு, புகாவாக நல்கினாள்;-
ஒன்று உறா முன்றிலோ இல். 381
ஏற்றார்கட்கு எல்லாம் இசை நிற்ப, தாம் உடைய
மாற்றார் கொடுத்திருப்ப, வள்ளன்மை; மாற்றாரை
மண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம்?-
பெண் பெற்றான் அஞ்சான், இழவு. 382
பயன் நோக்காது, ஆற்றவும் பார்த்து அறிவு ஒன்று இன்றி,
இசை நோக்கி, ஈகின்றார் ஈகை,-வயமாப்போல்
ஆலித்துப் பாயும் அலை கடல் தண் சேர்ப்ப!-
கூலிக்குச் செய்து உண்ணும் ஆறு. 383
மறாஅ தவனும், பலர் ஒன்று இரந்தால்,
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி, பொறாஅன்,
கரந்து உள்ளதூஉம் மறைக்கும்; அதனால்,
இரந்து ஊட்குப் பன்மையோ தீது. 384
தோற்றம் பெரிய நசையினார், அந் நசை
ஆற்றாதவரை அடைந்து ஒழுகல்,-ஆற்றுள்
கயல் புரை உண்கண் கனங்குழாய்!-அஃதால்,
உயவுநெய்யுள் குளிக்குமாறு. 385
காப்பு இகந்து ஓடி, கழி பெருஞ் செல்வத்தைக்
கோப் பரியான் கொள்ளக், கொடுத்து இராது என் செய்வர்?
நீத்த பெரியார்க்கே ஆயினும், மிக்கவை
மேவின், பரிகாரம் இல். 386
34. வீட்டு நெறி
எண்ணக் குறைபடாச் செல்வமும், இற்பிறப்பும்,
மன்னருடைய உடைமையும், மன்னரால்
இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்
தம்மை உடைமை தலை. 387
அடங்கி, அகப்பட்ட ஐந்தினையும் காத்து,
தொடங்கிய மூன்றினால் மாண்டு, ஈண்டு உடம்பு ஒழிய,
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே-
கொல்லிமேல் கொட்டு வைத்தார். 388
நட்டாரை ஆக்கி, பகை தணித்து, வை எயிற்றுப்
பட்டு ஆர் துடியிடை யார்ப் படர்ந்து, ஒட்டித்
தொடங்கினார் இல்லத்து, அதன்பின் துறவா
உடம்பினால் என்ன பயன்? 389
இல்வாழ்க்கையானும் இலதானும் மேற்கொள்ளார்,
நல் வாழ்க்கை போக, நடுவு நின்று, எல்லாம்
ஒருதலையாச் சென்று துணியாதவரே-
இரு தலையும் காக் கழித்தார். 390
வளமையும், தேசும், வலியும், வனப்பும்,
இளமையும், இற்பிறப்பும், எல்லாம் உளவா,
மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால்,-கூற்றம்
குதித்து உய்ந்து அறிவாரோ இல். 391
கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவாப் பசித் தோற்றம்
பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு, அது
கும்பியில் உந்திச் சென்று எறிதலால்,-தன் ஆசை
அம்பாய் உள் புக்குவிடும். 392
செல்வத் துணையும், தம் வாழ்நாள் துணையும், தாம்
தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து,
பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,-
முள்ளித் தேன் உண்ணுமவர். 393
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவை
என் நெஞ்சே! இன்று அழிவாய் ஆயினாய்; செல், நெஞ்சே!
இல் சுட்டி நீயும் இனிது உரைத்துச் சாவாதே
பல் கட்டு, அப் பெண்டிர், மகார். 394
சிறந்த தம் மக்களும் செய் பொருளும் நீக்கி,
துறந்தார் தொடரப்பாடு எவன் கொல்,-கறங்கு அருவி
ஏனல்வாய் வீழும் மலை நாட!-அஃது அன்றோ,
யானை போய், வால் போகாவாறு. 395
எனைப் பல் பிறப்பினும் ஈண்டி, தாம் கொண்ட
வினைப் பயன் மெய் உறுதல் அஞ்சி, எனைத்தும்,
கழிப்புழி ஆற்றாமை காண்டும்; அதுவே,
குழிப் புழி ஆற்றா குழிக்கு. 396
திரியும், இடிஞ்சிலும், நெய்யும், சார்வு ஆக
எரியும், சுடர் ஓர் அனைத்தால்; தெரியுங்கால்,
சார்வு அற ஒடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல்,
நீர் அற, நீர்ச் சார்வு அறும். 397
ஓத நீர் வேலி உலகத்தார், 'அந் நெறி
காதலர்' என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும்-
கானக நாட!-பயிலார்; பயின்றதூஉம்
வானகம் ஆகிவிடும். 398
பரந்தவர் கொள்கைமேல், பல் ஆறும் ஓடார்,
நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க!
வரம்பு இல் பெருமை தருமே;-பரம்பூரி
என்றும் பதக்கு ஏழ் வரும். 399
மிகைப்பாடல்கள்
அருளுடைமை, கொல்லாமை, ஐந்து அடக்கல், வாய்மை,
இருள் அடையாக் கல்வியொடு, ஈகை, புரை இல்லா
உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாகப் பெற்றால்,-
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை.
(புறத்திரட்டு -146)
'அமையப் பொருள் இல்லார் ஆற்றாதார்' என்பது
இமையத்து அனையார்கண் இல்லை;-சிமைய
நகை ஏர் இலங்கு அருவி நல் வரை நாட!
நகையேதான் ஆற்றுவிடும்.
(புறத்திரட்டு - 1107)
அறியாமையோடு இளமை ஆவதாம்; ஆங்கே,
செறியப் பெறுவதாம் செல்வம்;-சிறிய
பிறைபெற்ற வாணுதலாய்!-தானே ஆடும் பேய்,
பறைபெற்றால் ஆடாதோ, பாய்ந்து?
(புறத்திரட்டு - 1139)

No comments: