Saturday, October 27, 2007

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - திணைமொழி ஐம்பது

கண்ணஞ் சேந்தனார் இயற்றிய திணைமொழி ஐம்பது
இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என ஐந்திணை ஐம்பதிலிருந்து வேறுபட்டு பெயர் பெற்றுள்ளது. இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவர் சாத்தந்தையாரின் புதல்வர். இவரது பெயரைக் கொண்டே இவர் வைதிக சமயச் சார்பினர் என்று அறியலாம். கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனார் என்று கூறப்படுதலால், சேந்தனாரும், கூத்தனாரும் ஒரு வேளை உடன் பிறந்தோராயிருத்தல் கூடும் என்று ஊகிக்க இடம் உண்டு.


1. குறிஞ்சி
அஞ்சி அச்சுறுத்துவது
புகழ் மிகு சாந்து எறிந்து, புல் எரி ஊட்டி,
புகை கொடுக்கப் பெற்ற புலவோர் துகள் பொழியும்
வான் உயர் வெற்ப! இரவின் வரல் வேண்டா,
யானை உடைய சுரம். 1
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
கண முகை கை எனக் காந்தள் கவின,
'மண முகை' என்று எண்ணி, மந்தி கொண்டாடும்
விறல் மலை நாட! வரவு அரிதாம்கொல்லோ?
புனமும் அடங்கின காப்பு. 2
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது
ஓங்கல் இறு வரைமேல் காந்தள் கடி கவின,
பாம்பு என ஓடி, உரும் இடிப்பு, கண்டு இரங்கும்
பூங் குன்ற நாடன் புணர்ந்த அந் நாள் போலா,
ஈங்கு நெகிழ்ந்த, வளை. 3
தலைமகனைத் தோழி இரவுக்குறி நயப்பித்தது
ஏனம் இடந்திட்ட ஈர் மணி கொண்டு, எல்லிடை,
கானவர் மக்கள் கனல் எனக் கை காய்த்தும்
வான் உயர் வெற்பன் வருவான்கொல், என் தோழி
மேனி பசப்புக் கெட? 4
பின்னின்ற தலைமகனைக் காவல் மிகுதி சொல்லிச் சேட்படுத்தது
விரை கமழ் சாரல் விளை புனம் காப்பார்
வரையிடை வாரன்மின்; - ஐய! - உரை கடியர்;
வில்லினர்; வேலர்; விரைந்து செல் அம்பினர்;
கல்லிடை வாழ்நர் எமர். 5
யானை உழலும் அணி கிளர் நீள் வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்;
ஏனலுள், - ஐய! - வரவு மற்று என்னைகொல்?
காணினும், காய்வர் எமர். 6
இரவுக்குறி விலக்கி வரைவு கடாயது
யாழும் குழலும் முழவும் இயைந்தென
வீழும் அருவி விறல் மலை நல் நாட!
மாழை மான் நோக்கியும் ஆற்றாள்; இர வரின்,
ஊர் அறி கெளவை தரும். 7
(சேட்) படை
வேங்கை மலர, வெறி கமழ் தண் சிலம்பின்
வாங்கு அமை மென் தோள் குறவர் மகளிரேம்;
சோர்ந்து குருதி ஒழுக, மற்று இப் புறம்
போந்தது இல், - ஐய! - களிறு. 8
தோழி தலைமகனை இரவுக்குறி நயப்பித்தது
பிணி நிறம் தீர்ந்து, பெரும் பணைத்தோள் வீங்க,
மணி மலை நாடன் வருவான்கொல், - தோழி! -
கணி நிற வேங்கை மலர்ந்து, வண்டு ஆர்க்கும்
மணி நிற மாலைப் பொழுது? 9
தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால், தோழி வரைவு கடாயது
பலவின் பழம் பெற்ற பைங் கண் கடுவன்,
'எல!' என்று இணை பயிரும் ஏகல் சூழ் வெற்பன்
புலவும்கொல்? - தோழி! - புணர்வு அறிந்து, அன்னை
செலவும் கடிந்தாள், புனத்து. 10
2. பாலை
தலைமகனது செலவு உணர்ந்து, வேண்டாத மனத்தாளாய், தலைமகள் தோழிக்குச் சொல்லியது
கழுநீர் மலர்க் கண்ணாய்! கெளவையோ நிற்க,
பொருள் நீரார் காதலர் பொய்த்தனர், நீத்தார்-
அழி நீர ஆகி, அரித்து எழுந்து தோன்றி,
வழி நீர் அறுத்த சுரம். 11
'யான் பிரியத் தலைமகள் ஆற்றுமோ? நீ அறிவாயாக!' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது
முரி பரல ஆகி, முரண் அழிந்து தோன்றி,
எரி பரந்த கானம் இயை பொருட்குப் போவீர்;
அரி பரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
தெரிவார் யார், தேரும் இடத்து? 12
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர்
மராஅ மலர்ந்தன, தோன்றி; விராஅய்க்
கலந்தனர் சென்றார் வலந்த சொல் எல்லாம்-
பொலந்தொடீஇ! - பொய்த்த குயில். 13
புன்கு பொரி மலரும் பூந் தண் பொழில் எல்லாம்
செங் கண் குயில் அகவும் போழ்து கண்டும்,
பொருள் நசை உள்ளம் துரப்ப, துறந்தார்
வரு நசை பார்க்கும், என் நெஞ்சு. 14
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
சிறு புன் புறவொடு சிற்றெழால் சீறும்
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல், - தோழி! -
முறி எழில் மேனி பசப்ப, அருள் ஒழிந்து.
ஆர் பொருள் வேட்கையவர்? 15
புணர்ந்து உடன்போகிய தலைமகன் தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு சொல்லியது
கருங் கால் மராஅ நுணாவோடு அலர,
இருஞ் சிறை வண்டுஇனம் பாலை முரல,-
அரும்பிய முள் எயிற்று அம் சொல் மடவாய்!-
விரும்பு, நாம் செல்லும் இடம். 16
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
கல் அதர் வாயில், கடுந் துடிகள் பம்பும்
வில் உழுது வாழ்நர் குறும்புள்ளும், போவர்கொல்-
எல் வளை மென் தோள் நெகிழ, பொருள் நசைஇ,
நல்காத் துறந்த நமர்? 17
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் உடன்படாது சொல்லியது
கதிர் சுட, கண் உடைந்து, முத்தம் சொரியும்
வெதிர் பிணங்கும் சோலை வியன் கானம் செல்வார்க்கு
எதிர்வன போலிதே? எல் வளையோ, கொன்னே
உதிர்வன போல உள! 18
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
கலையொடு மான் இரங்கு கல் அதர் அத்த
நிலை அஞ்சி, நீள் சுரத்து அல்குவர்கொல்? - தோழி! -
முலையொடு சோர்கின்ற, பொன் வண்ணம்; அன்னோ!
வளையோடு சோரும், என் தோள். 19
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது
ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ் சுரம்,
பாற்றினம் சேரப் படுநிழல் கண்டு அஞ்சி,
கூற்று அன வல் வில் விடலையோடு என் மகள்
ஆற்றும்கொல், ஐய நடந்து? 20
3. முல்லை
தலைமகன் வரைவு மலிந்தது தோழி தலைமகட்குச் சொல்லியது
அஞ்சனம் காயா மலர, குருகிலை
ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள,
தண் கமழ் கோடல் துடுப்பு ஈன, காதலர்
வந்தார்; திகழ்க, நின் தோள்! 21
தோழி பருவம் காட்டி, தலைமகளை வற்புறுத்தியது
மென் முலைமேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல்?-
நல் நுதல் மாதராய்! - ஈதோ நமர் வருவர்;
பல் நிற முல்லை அரும்ப, பருவம் செய்து,
இன் நிறம் கொண்டது, இக் கார். 22
சென்றார் வருவர்; செறிதொடீஇ! கார் இஃதோ,
வெஞ் சின வேந்தர் முரசின் இடித்து உரறி,
தண் கடல் நீத்தம் பருகி, தலைசிறந்து,
இன்றையின் நாளை மிகும். 23
செஞ் சுணங்கின் மென் முலையாய்! சேர் பசலை தீர்; இஃதோ
வஞ்சினம் சொல்லி வலித்தார் வரு குறியால்;
வெஞ் சினம் பொங்கி, இடித்து உரறிக் கார் வானம்
தண் பெயல் கான்ற, புறவு. 24
கரு இயல் கார் மழை கால் கலந்து ஏந்த,
உருகு மட மான் பிணையோடு உகளும்;-
உருவ முலையாய்! - நம் காதலர் இன்னே
வருவர்; வலிக்கும் பொழுது. 25
இருங் கடல் மாந்திய ஏர் கொள் எழிலி
கருங் கொடி முல்லை கவின முழங்கி,
பெரும் பெயல் தாழ, பெயர் குறி செய்தார்;
பொருந்த நமக்கு உரைத்த போழ்து. 26
ஆயர் இனம் பெயர்த்து, ஆம்பல் அடைதர,
பாய முழங்கி, படு கடலுள் நீர் முகந்து,
மா இரு ஞாலம் இருள் கூர் மருள் மாலை-
சேயவர், செய்த குறி. 27
பருவம் காட்டிய தோழி வற்புறுத்தியது
அதிர் குரல் ஏறோடு அலை கடல் மாந்தி,
முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி,
கதிர் மறை மாலை, கனை பெயல் தாழ,
பிதிரும் முலைமேல், சுணங்கு. 28
கோடல்அம் கூர் முகை கோள் அரா நேர் கருத,
காடு எலாம் கார் செய்து, முல்லை அரும்பு ஈன,
ஆறு எலாம் நுண் அறல் வார, அணியிழாய்!
போதராய்; காண்பாம், புறவு. 29
அருவி அதிர, குருகிலை பூப்ப,
தெரி ஆ இனநிரை தீம் பால் பிலிற்ற,-
வரி வளைத் தோளி!-வருவார் நமர்கொல்?
பெரிய மலர்ந்தது இக் கார். 30
4. மருதம்
தலைமகள் வாயில் மறுத்தது
பழனம் படிந்த படு கோட்டு எருமை
கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு,
உரன் அழிந்து, ஓடும் ஒலி புனல் ஊரன்
கிழமை உடையன், என் தோட்கு. 31
கணைகால் நெடு மருது கான்ற நறுந் தாது
இணைக் கால நீலத்து இதழ்மேல் சொரியும்
பணைத் தாட் கதிர்ச் செந்நெல் பாய் வயல் ஊரன்
இணைத்தான், எமக்கும் ஓர் நோய். 32
தோழி வாயில் மறுத்தது
கடையாயார் நட்பேபோல், காஞ்சி நல் ஊர!
உடைய இள நலம் உண்டாய்; கடை, அக்
கதிர் முலை ஆகத்துக் கண் அன்னார் சேரி
எதிர் நலம் ஏன்று நின்றாய். 33
தலைமகள் பாணற்கு வாயில் மறுத்தது
செந்நெல் விளை வயல் ஊரன், சில் பகல்,
தன் நலம் என் அலார்க்கு ஈயான்; எழு - பாண! -
பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்,
வாரிக்குப் புக்கு, நின்று, ஆய்! 34
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும்
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன்
மாண் இழை நல்லார் இள நலம் உண்டு, அவர்
மேனி ஒழியவிடும். 35
தோழி வாயில் நேர்வாள் கூறியது
செந்தாமரை மலரும் செய் வயல் நல் ஊர!
நொந்தால் மற்று உன்னைச் செயப்படுவது என் உண்டாம்-
தந்தாயும் நீயே; தர வந்த நல் நலம்
கொண்டாயும் நீ ஆயக்கால்? 36
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
பல் காலும் வந்து பயின்று உரையல்! - பாண! - கேள்;
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள்,
எல் வளையம்; மென் தோளேம்; எங்கையர்தம் போல
நல்லவருள் நாட்டம் இலேம். 37
நல் வயல் ஊரன் நலம் உரைத்து, நீ - பாண! -
சொல்லின் பயின்று உரைக்க வேண்டா; ஒழிதி, நீ!
எல்லு நல் முல்லைத் தார் சேர்ந்த இருங்கூந்தல்
சொல்லும், அவர் வண்ணம் சோர்வு. 38
வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
கருங் கயத்து ஆங்கண் கழுமிய நீலம்
பெரும் புற வாளைப் பெடை கதூஉம் ஊரன்
விரும்பு நாள் போலான்; வியல் நலம் உண்டான்;
கரும்பின் கோது ஆயினேம் யாம். 39
'இந் நிலத்தின்கண் இன்ன பெற்றியால் வருவாயாக!' எனச் சொல்லியது
ஆம்பல் அணித் தழை ஆரம் துயல்வரும்
தீம் புனல் ஊரன் மகள் இவள்; ஆய்ந்த நறுந்
தே மலர் நீலம் பிணையல்; செறி மலர்த்
தாமரை, தன்னையர் பூ. 40
5. நெய்தல்
அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
நெய்தல் படப்பை நிறை கழித் தண் சேர்ப்பன்
கைதை சூழ் கானலுள் கண்ட நாள்போல் ஆனான்;
செய்த குறியும் பொய் ஆயின; - ஆயிழையாய்! -
ஐதுகொல், ஆன்றார் தொடர்பு? 41
தோழி வரைவு கடாயது
முத்தம் அரும்பும் முடத் தாள் முது புன்னை
தத்தும் திரை தயங்கும் தண் அம் கடற் சேர்ப்ப!
சித்திரப் பூங் கொடி அன்னாட்கு அருளீயாய்,
வித்தகப் பைம் பூண் நின் மார்பு! 42
அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்த தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ,
நெறி இறாக் கொட்கும் நிமிர் கழிச் சேர்ப்பன்,-
அறிவு அறா இன் சொல் அணியிழையாய்! - நின் இல்
செறிவு அறா, செய்த குறி. 43
தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது
இன மீன் இருங் கழி ஓதம் உலாவ,
மணி நீர் பரக்கும் துறைவ! தகுமோ-
குண நீர்மை குன்றாக் கொடி அன்னாள் பக்கம்
நினை நீர்மை இல்லா ஒழிவு? 44
கடல் கொழித்திட்ட கதிர் மணி முத்தம்
படம் அணி அல்குல் பரதர் மகளிர்
தொடலை சேர்த்து ஆடும் துறைவ! என் தோழி
உடலும், உறு நோய் உரைத்து. 45
முருகு இயல் கானல் அகன் கரை ஆங்கண்
குருகுஇனம் ஆர்க்கும் கொடுங் கழிச் சேர்ப்ப!
மருவி வரலுற வேண்டும், என் தோழி
உரு அழி உள் நோய் கெட. 46
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழியால் சொல் எடுப்பப்பட்டு, தலைமகள் சொல்லியது
அணி பூங் கழிக் கானல், அற்றை நாள் போலான்;
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர,
துணி கடற் சேர்ப்பன் துறந்தான்கொல்? - தோழி!-
தணியும், என் மென் தோள் வளை. 47
தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது
கறங்கு மணி நெடுந் தேர் கண் வாள் அறுப்ப,
பிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப,
வறம் கூர் கடுங் கதிர் வல் விரைந்து நீங்க,
நிறம் கூரும் மாலை வரும். 48
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது
மயில்கொல்? மடவாள்கொல்? மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வம்கொல்? - கேளீர்! - குயில் பயிரும்
கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும், என் நெஞ்சு. 49
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி வரைவு கடாயது
பவழமும் முத்தும் பளிங்கும் விரைஇ,
புகழக் கொணர்ந்து, புறவு அடுக்கும் முன்றில்,
தவழ் திரைச் சேர்ப்பன் வருவான்கொல்? - தோழி! -
திகழும், திரு அமர் மார்பு. 50

No comments: