Saturday, October 27, 2007

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-திணைமாலை நூற்றைம்பது

கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது

கீழ்க்கணக்கு வரிசையில் அகப்பொருள் நூல்கள் ஆறு. அவற்றுள் இரண்டு நூல்கள் 'திணை' என்றும், வேறு இரண்டு 'ஐந்திணை' என்றும் பெயர் பெறுவன. ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையால் 'திணைமாலை' என்றும், பாடல் அளவினால் 'திணைமாலை நூற்றைம்பது' என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது. கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது இதுவே. குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம், என்னும் வரிசையில் ஐந்திணைகளை இந்நூல் முறைப்படுத்தியுள்ளது. திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டுள்ளன. எனினும் குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. அதனால், இந்நூலில் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந் நூலின் ஆசிரியர் ஏலாதியை இயற்றிய கணிமேதாவியார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர்.


1. குறிஞ்சி
தலைமகளும் தோழியும் ஒருங்கு இருந்தவழிச் சென்று. தலைமகன் தோழியை மதியுடம்படுத்தது
நறை படர் சாந்தம் அற எறிந்து, நாளால்
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல், - பிறை எதிர்ந்த
தாமரைபோல் வாள் முகத்துத் தாழ்குழலீர்! - காணீரோ,
ஏ மரை போந்தன ஈண்டு? 1
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
சுள்ளி, சுனை நீலம், சோபாலிகை, செயலை,
அள்ளி அளகத்தின்மேல், ஆய்ந்து, தெள்ளி,
இதணால் கடி ஒடுங்கா ஈர்ங் கடா யானை
உதணால் கடிந்தான் உளன். 2
பகற்குறிக்கண் வந்த தலைமகனைக் கண்டு, தோழி செறிப்பு அறிவுறீஇயது
சாந்தம் எறிந்து உழுத சாரல், சிறு தினை,
சாந்தம் எறிந்த இதண் மிசை, சாந்தம்
கமழக் கிளி கடியும் கார் மயில் அன்னாள்
இமிழ, கிளி எழா, ஆர்த்து. 3
தலைமகள் இற்செறிந்த காலத்து. புனத்தின்கண் வந்த தலைமகன் தலைமகளைக் காணாது ஆற்றாது பெயர்கின்றான் சொல்லியது
கோடாப் புகழ் மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன்; போர் வாடாக்
கருங் கொல் வேல் மன்னர் கலம் புக்க கொல்லோ,
மருங்குல் கொம்பு அன்னாள் மயிர்? 4
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி செறிப்பு அறிவுறீஇயது
வினை விளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனை விளைவு நாம் எண்ண, பாத்தித் தினை விளைய,-
மை ஆர் தடங் கண் மயில் அன்னாய்! - தீத் தீண்டு
கையார் பிரிவித்தல் காண்! 5
இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி மறுத்துச் சொல்லியது
மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து, அருவி
மால் நீல மால் வரை நாட! கேள்: மா நீலம்
காயும் வேற் கண்ணாள், கனை இருளில் நீ வர,
ஆயுமோ? மன்ற, நீ ஆய்! 6
கறி வளர் பூஞ் சாரல், கைந்நாகம் பார்த்து,
நெறி வளர் நீள் வேங்கை கொட்கும், - முறி வளர்
நல் மலை நாட! - இர வரின், வாழாளால்,
நல் மலை நாடன் மகள். 7
பின்னிலை முனியாது நின்ற தலைமகன் தோழியை மதி உடம்படுத்தது
அவட்குஆயின், ஐவனம் காவல் அமைந்தது;
இவட்குஆயின், செந் தினை கார் ஏனல்; இவட்குஆயின்,
எண் உளவால், ஐந்து; இரண்டு ஈத்தான்கொல்? என் ஆம்கொல்?
கண் உளவால், காமன் கணை! 8
பாங்கற்குத் தலைமகன் தலைமகளைக் கண்ட வகை கூறி, தன்ஆற்றாமை மிகுதி சொல்லியது
வஞ்சமே என்னும் வகைத்தால்; ஓர் மா வினாய்,
தஞ்சம் தமியனாய்ச் சென்றேன்; என் நெஞ்சை
நலம் கொண்டு ஆர் பூங் குழலாள், நன்று ஆயத்து, அன்று, என்
வலம் கொண்டாள், கொண்டாள் இடம். 9
தோழி நெறி விலக்கியது
கரு விரல், செம் முக, வெண் பல், சூல், மந்தி
பரு விரலால் பைஞ் சுனை நீர் தூஉய், பெரு வரைமேல்
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட! வாரலோ,
வான் தேவர் கொட்கும் வழி! 10
கரவு இல் வள மலைக் கல் அருவி நாட!
உர வில் வலியாய், ஒரு நீ, இரவின்,
வழிகள் தாம் சால வர அரிய; வாரல்,
இழி கடா யானை, எதிர்! 11
வெறி விலக்கி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
வேலனார் போக; மறி விடுக்க; வேரியும்
பாலனார்க்கு ஈக; - பழியிலாள் பாலால்
கடும் புனலின் நீந்தி, கரை வைத்தாற்கு அல்லால்,
நெடும், பணைபோல் தோள் நேராள், நின்று. 12
நெறியினது அருமை கூறி, தோழி இரவுக்குறி மறுத்தது
ஒரு வரைபோல் எங்கும் பல வரையும் சூழ்ந்த
அரு வரை உள்ளதாம் சீறூர்; வரு வரையுள்
ஐ வாய நாகம்; புறம் எல்லாம், ஆயுங்கால்,
கை வாய நாகம் சேர் காடு. 13
செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது
வருக்கை வள மலையுள், மாதரும் யானும்,
இருக்கை இதண் மேலேம் ஆக, பருக் கைக்
கடாஅம் மால் யானை கடிந்தானை அல்லால்,
தொடாஅவால், என் தோழி தோள். 14
தலைமகன் சான்றோரை வரைவு வேண்டி விடுத்த இடத்து, தலைமகள் தந்தைக்கும் தனையன்மார்க்கும் நற்றாய் அறத்தொடு நின்றது
வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய்க்
கோடாது நீர் கொடுப்பின் அல்லது, கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்ப்
பொழிலும் விலை ஆமோ, போந்து? 15
தோழி சேட்படுத்த இடத்து, தலைமகன் தனது ஆற்றாமையால் சொல்லியது
'நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி, தன்
பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது, பூண் ஆகம்'
என்றேன்; இரண்டாவது உண்டோ ? மடல் மாமேல்,
நின்றேன், மறுகிடையே நேர்ந்து. 16
'நின்னால் சொல்லப்பட்டவளை அறியேனாலோ' என்ற தோழிக்குத் தலைமகன் அறிய உரைத்தது
அறிகு அவளை; ஐய இடை, மடவாய்! ஆய,
சிறிது அவள் செல்லாள், இறும் என்று அஞ்சிச் சிறிது, அவள்
நல்கும்வாய் காணாது, நைந்து உருகி என் நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும். 17
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது
என் ஆம் கொல்? - ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப,
பொன் ஆம், போர் வேலவர்தாம் புரிந்தது; என்னே!
மருவி ஆம், மாலை மலை நாடன் கேண்மை;
இருவியாம், ஏனல் இனி. 18
பின்னின்ற தலைமகன் தோழி குறை மறாமல் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி, பல் பூப் பெய்-
தாலொத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து, என்
நெஞ்சம் வாய்ப் புக்கு ஒழிவு காண்பானோ, காண் கொடா?
அம் சாயற்கே நோவல் யான். 19
கையுறை மறை
நாள் வேங்கை பொன் விளையும் நல் மலை நல் நாட!
கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார்; கோள் வேங்கை
அன்னையால் நீயும்; அருந் தழை யாம் ஏலாமைக்கு
என்னையோ? நாளை எளிது. 20
ஆற்றானாய தலைமகனைத் தோழி ஏன்றுகொண்டு கையுறை எதிர்ந்தது
'பொன் மெலியும் மேனியாள் பூஞ் சுணங்கு மென் முலைகள்
என் மெலிய வீங்கினவே, பாவம்!' என்று, என் மெலிவிற்கு?
அண் கண்ணி வாடாமை, யான், 'நல்ல' என்றால், தான்
உண்கண்ணி வாடாள் உடன்று. 21
பகற்குறிக்கண் தலைமகள் குறிப்பு இன்றிச் சார்கிலாத தலைமகன் தனது ஆற்றாமை சொல்லியது
கொல் யானை வெண் மருப்பும், கொல் வல் புலி அதளும்,
நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம்
ஓர் அம்பினான் எய்து போக்குவர்; யான் போகாமல்,
ஈர் அம்பினால் எய்தாய், இன்று. 22
'நின்னால் குறிக்கப்பட்டாளை யான் அறியேன்' என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது; பாங்கற்குக் கூறியதூஉம் ஆம்
பெரு மலை தாம் நாடி, தேன் துய்த்து, பேணாது
அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு
நாண் அழிந்து, நல்ல நலன் அழிந்து, நைந்து உருகி,
ஏண் அழிதற்கு யாம் ஏயினம். 23
தோழி குறை மறாமல் தலைமகன் தனது ஆற்றாமை மிகுதி சொல்லியது
நறுந் தண் தகரம், வகுளம், இவற்றை
வெறும் புதல்போல் வேண்டாது, வேண்டி, எறிந்து உழுது,
செந் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
நொந்து இனைய வல்லளோ? நோக்கு! 24
தோழி தலைமகனை நெறி விலக்கி, வரைவு கடாயது
கொல் இயல் வேழம், குயவரி கோட் பிழைத்து,
நல் இயல் தம் இனம் நாடுவபோல், நல் இயல்
நாம வேற் கண்ணாள் நடுநடுப்ப வாரலோ,
ஏம வேல் ஏந்தி, இரா! 25
கருங் கால் இள வேங்கை கான்ற பூக் கல்மேல்
இருங் கால் வய வேங்கை ஏய்க்கும் மருங்கால்
மழை வளரும் சாரல் இர வரின், வாழாள்,
இழை வளரும் சாயல் இனி. 26
தோழி படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது
பனி வரை நீள் வேங்கைப் பய மலை நல் நாட!
'இனி வரையாய்' என்று எண்ணிச் சொல்வேன்; முனி வரையுள்
நின்றான் வலியாக நீ வர, யாய் கண்டாள்;
ஒன்றாள், காப்பு ஈயும், உடன்று. 27
தலைமகன் சொன்ன குறிவழியே சென்று, தலைமகளைக் கண்டு, பாங்கன் சொல்லியது
மேகம் தோய் சாந்தம், விசை, திமிசு, காழ் அகில்,
நாகம், தோய் நாகம், என இவற்றைப் போக
எறிந்து, உழுவார் தங்கை இருந் தடங் கண் கண்டும்,
மறிந்து உழல்வானோ, இம் மலை? 28
பகற்குறிக்கண் இடம் காட்டியது
பலா எழுந்தபால் வருக்கைப் பாத்தி அதன் நேர்
நிலா எழுந்த வார் மணல் நீடி, சுலா எழுந்து,
கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூந் தண் பொதும்பர்-
தான் நாறத் தாழ்ந்த இடம். 29
பாங்கற்குத் தலைமகன் கூறியது
திங்களுள் வில் எழுதி, தேராது, வேல் விலக்கி,
தங்கள் உளாள் என்னும் தாழ்வினால், இங்கண்,
புனம் காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்து, என்
மனம் காக்க வைத்தார், மருண்டு. 30
தோழி தலைமகளை மெலிதாகச் சொல்லி, குறை நயப்பக் கூறியது
தன் குறை இது என்னான், தழை கொணரும் தண் சிலம்பன்
நின் குறை என்னும் நினைப்பினனாய், பொன் குறையும்
நாள் வேங்கை நீழலுள் நண்ணான்; எவன்கொலோ,
கோள் வேங்கை அன்னான் குறிப்பு? 31
2. நெய்தல்
பாங்கற்குச் சொல்லியது
பானல் அம் தண் கழிப் பாடு அறிந்து, தன்னைமார்
நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல்
படு புலால் காப்பாள் படை நெடுங் கண் நோக்கம்
கடிபு ஒல்லா; என்னையே காப்பு. 32
பெருங் கடல் வெண் சங்கு காரணமா, பேணாது
இருங் கடல் மூழ்குவார் தங்கை, இருங் கடலுள்
முத்து அன்ன, வெண் முறுவல் கண்டு உருகி, நைவார்க்கே
ஒத்தனம், யாமே உளம். 33
புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது
தாமரைதான் முகமா, தண் அடை ஈர் மா நீலம்
காமர் கண் ஆக, கழி துயிற்றும், காமரு சீர்த்
தண் பரப்ப! பாய் இருள் நீ வரின், தாழ் கோதையாள்
கண் பரப்ப, காண், நீர் கசிந்து. 34
'இரவும் பகலும் வாரல்' என்று தலைமகனைத் தோழி வரைவு கடாயது
புலால் அகற்றும் பூம் புன்னைப் பொங்கு நீர்ச் சேர்ப்ப!
நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல், சுலா அகற்றி,
கங்குல் நீ வாரல்; பகல் வரின், மாக் கவ்வை ஆம்,
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு. 35
தோழி வரைவு கடாயது
'முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு' என்றே
குருகு வாய்ப் பெய்து, இரை கொள்ளாது, உருகி மிக
இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப! நீ
மன்னா வரவு மற! 36
ஓத நீர் வேலி உரை கடியாப் பாக்கத்தார்,
காதல், நீர் வாராமை கண் நோக்கி, ஓத நீர்
அன்று அறியும்; ஆதலால், வாராது, அலர் ஒழிய,
மன்று அறியக் கொள்ளீர், வரைந்து. 37
காமம் மிக்க கழிபடர் கிளவி
மாக் கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர்
மாக் கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மாக் கடலே!
என் போலத் துஞ்சாய்; இது செய்தார் யார் - உரையாய்! -
என் போலும் துன்பம் நினக்கு? 38
நொதுமலர் வரைந்து புகுந்த பருவத்து, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது
தந்தார்க்கே ஆமால், தட மென் தோள் - இன்ன நாள்
வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம்; - வந்தார்க்கே
காவா இள மணல் தண் கழிக் கானல்வாய்ப்
பூவா இள ஞாழல் போது. 39
வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது
தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா,
'இன் துணையோடு ஆட இயையுமோ? இன் துணையோடு
ஆடினாய் நீ ஆயின், அந் நோய்க்கு என் நொந்து?' என்று
போயினான் சென்றான், புரிந்து. 40
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல் எடுக்கப்பட்டு, தலைமகள் தனது ஆற்றாமையால் சொல்லியது
உருகுமால் உள்ளம், ஒரு நாளும் அன்றால்;
பெருகுமால், நம் அலர் பேண, - பெருகா
ஒருங்கு வால் மின்னோடு, உரும் உடைத்தாய், பெய்வான்,
நெருங்கு வான் போல, நெகிழ்ந்து. 41
நயப்பு; கையுறையும் ஆம்
கவளக் களிப்பு இயல் மால் யானை, சிற்றாளி
தவழ, தான் நில்லாததுபோல், பவளக்
கடிகையிடை முத்தம் காண்தொறும், நில்லா -
தொடி கையிடை முத்தம் தொக்கு. 42
தலைமகனைத் தோழி வரைவு கடாயது
கடற் கோடு இரு மருப்பு, கால் பாகன் ஆக,
அடற் கோட்டு யானை திரையா, உடற்றி,
கரை பாய் நீள் சேர்ப்ப! கனை இருள் வாரல்!
வரைவாய், நீ, ஆகவே வா! 43
பகற்குறியிடம் காட்டியது
கடும் புலால் புன்னை கடியும் துறைவ!
படும் புலால் புள் கடிவான் புக்க, தடம் புல் ஆம்
தாழை, மா ஞாழல், ததைந்து உயர்ந்த தாழ் பொழில்,
ஏழை மான் நோக்கி இடம். 44
தலைமகன் சொல்லிய குறி வழி அறிந்து, தலைமகளைக் கண்ட பாங்கன் தலைமகனை வியந்து சொல்லியது
தாழை தவழ்ந்து உலாம் வெண் மணல் தண் கானல்,
மாழை நுளையர் மட மகள், ஏழை,
இணை நாடில் இல்லா, இருந் தடங் கண் கண்டும்,
துணை நாடினன்; தோம் இலன்! 45
தோழி நெறி விலக்கி, வரைவு கடாயது
தந்து, ஆயல் வேண்டா; ஓர் நாள் கேட்டு, தாழாது
வந்தால், நீ எய்துதல் வாயால் மற்று; எந்தாய்!
மறி மகர வார் குழையாள் வாழாள்; நீ வாரால்,
எறி மகரம் கொட்கும் இரா. 46
பாங்கன் தலைமகனைக் கண்டு, தலைமகளை வியந்து சொல்லியது
பண்ணாது, பண்மேல் தேன் பாடும் கழிக் கானல்,
எண்ணாது கண்டார்க்கே ஏர் அணங்கால்; எண்ணாது
சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளைக்
காவார், கயிறுரீஇவிட்டார். 47
தலைமகற்கு இரவுக்குறி மறுத்தது
திரை மேல் போந்து எஞ்சிய தெண் கழிக் கானல்
விரை மேவும் பாக்கம் விளக்கா, கரைமேல்,
விடுவாய்ப் பசும் புற இப்பி கால் முத்தம்
படு வாய் இருள் அகற்றும், பாத்து. 48
எங்கு வருதி, இருங் கழித் தண் சேர்ப்ப! -
பொங்கு திரை உதைப்பப் போந்து ஒழிந்த சங்கு
நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும்;
வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து? 49
தோழி வரைவு கடாயது
திமில் களிறு ஆக, திரை பறையா, பல் புள்
துயில் கெடத் தோன்றும் படையா, துயில்போல்
குறியா வரவு ஒழிந்து, கோல நீர்ச் சேர்ப்ப!
நெறியால் நீ கொள்வது நேர். 50
தலைமகற்குத் தோழி குறை நேர்ந்து, பகற்குறியிடம் அறியச் சொல்லியது
கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண்
படும் புலால் பார்த்தும்; பகர்தும்; அடும்பு எலாம் -
சாலிகைபோல் வலை சாலப் பல உணங்கும்; -
பாலிகை பூக்கும் பயின்று. 51
தலைமகனைத் தோழி வரைவு கடாயது
திரை பாகன் ஆக, திமில் களிறு ஆக,
கரை சேர்ந்த கானல் படையா, விரையாது -
வேந்து கிளர்ந்தன்ன வேலை நீர்ச் சேர்ப்ப! - நாள்
ஆய்ந்து, வரைதல் அறம். 52
பாறு புரவியா, பல் களிறு நீள் திமிலா,
தேறு திரை பறையா, புள் படையா, தேறாத
மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப! மற்று எமர் -
முன் கிளர்ந்து எய்தல் முடி! 53
வாராய்; வரின், நீர்க் கழிக் கானல் நுண் மணல்மேல்
தேரின் மா கால் ஆழும் தீமைத்தே; ஓர் இலோர்,
கோள் நாடல், வேண்டா; குறி அறிவார்க் கூஉய்க் கொண்டு, ஓர்
நாள் நாடி, நல்குதல் நன்று. 54
கண் பரப்ப காணாய், கடும் பனி; கால் வல் தேர்
மண் பரக்கும் மா இருள் மேற்கொண்டு, மண் பரக்கு -
மாறு, நீர் வேலை! நீ வாரல்! வரின், ஆற்றாள்,
ஏறு நீர் வேலை எதிர். 55
தலைமகற்கு இரவுக்குறி நேர்ந்த தோழி, இடம் காட்டியது
கடற் கானல் சேர்ப்ப! கழி உலாஅய் நீண்ட
அடல் கானல் புன்னை, தாழ்ந்து, ஆற்ற, மடற் கானல்,
அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து - எம்
முன்றில் இள மணல்மேல் மொய்த்து. 56
தோழி வரைவு கடாயது
வரு திரை தான் உலாம் வார் மணல் கானல்,
ஒரு திரை ஓடா அளவை, இரு திரை
முன் வீழும் கானல், முழங்கு கடல் சேர்ப்ப!
என் வீழல் வேண்டா, இனி. 57
தலைமகற்குத் தோழி பகற்குறி நேர்ந்து, இடம் காட்டியது
மாயவனும் தம்முனும் போலே, மறி கடலும்
கானலும் சேர் வெண் மணலும் காணாயோ - கானல்
இடை எலாம், ஞாழலும் தாழையும்; ஆர்ந்த
புடை எலாம், புன்னை; - புகன்று? 58
'இப்பொழுது வாரல்!' என்று, வரைவு கடாயது
பகல் வரின், கவ்வை பல ஆம் பரியாது,
இர வரின், ஏதமும் அன்ன; புக அரிய
தாழை துவளும் தரங்க நீர்ச் சேர்ப்பிற்றே,
ஏழை நுளையர் இடம். 59
பாங்கற்குத் தலைமகன் கூறியது
திரை அலறிப் பேரத் தெழியாத் திரியா,
கரை அலவன் காலினால் காணா, கரை அருகே
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடுங் கண்ணினாள்,
மையல், நுளையர் மகள். 60
தலைமகற்குத் தோழி இரவுக்குறி மறுத்தது
அறிகு அரிது, யார்க்கும் - அரவ நீர்ச் சேர்ப்ப!
நெறி, திரிவார் இன்மையால், இல்லை - முறி திரிந்த
கண்டல், அம் தண் தில்லை கலந்து, கழி சூழ்ந்த
மிண்டல், அம் தண் தாழை, இணைந்து. 61
தலைமகளை ஒருநாள் கோலம் செய்து, அடியிற் கொண்டு முடிகாறும் நோக்கி, 'இவட்குத் தக்கான் யாவனாவன் கொல்லோ?' என்று ஆராய்ந்த செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது
வில்லார் விழவினும், வேல் ஆழி சூழ் உலகில்
நல்லார் விழவகத்தும், நாம் காணேம்; - நல்லாய்! -
உவர்க்கத்து ஒரோ உதவிச் சேர்ப்பன் ஒப்பாரைச்
சுவர்க்கத்து உளராயின், சூழ். 62
3. பாலை
தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறீஇயது
எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம்
வரி நிற நீள் வண்டர் பாட, புரி நிற நீள்
பொன் அணிந்த, கோங்கம்; - புணர் முலையாய்! - பூந்தொடித் தோள்
என் அணிந்த, ஈடு இல் பசப்பு? 63
'பேணாய், இதன் திறத்து!' என்றாலும், பேணாதே
நாண் ஆய நல் வளையாய்! நாண் இன்மை காணாய்;
எரி சிதறி விட்டன்ன, ஈர் முருக்கு; ஈடு இல்
பொரி சிதறி விட்டன்ன, புன்கு. 64
சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் குரவொடு புலம்பியது
தான் தாயாக் கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப,
ஈன்றாய் நீ பாவை, இருங் குரவே! ஈன்றாள்
மொழி காட்டாய் ஆயினும், முள் எயிற்றாள் சென்ற
வழி காட்டாய், 'ஈது' என்று, வந்து. 65
தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
வல் வரும்; காணாய் - வயங்கி, முருக்கு எல்லாம்,
செல்வர் சிறார்க்குப் பொற்கொல்லர்போல், நல்ல
பவளக் கொழுந்தின்மேல் பொன் - தாலி பாஅய்த்
திகழக் கான்றிட்டன, தேர்ந்து! 66
பருவம் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
வெறுக்கைக்குச் சென்றார், விளங்கிழாய்! தோன்றார்;
'பொறுக்க!' என்றால், பொறுக்கலாமோ? - ஒறுப்பபோல்
பொன்னுள் உறு பவளம் போன்ற, புணர் முருக்கம்;
என் உள் உறு நோய் பெரிது! 67
பொருள் வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவு அழுங்கியது
சென்றக்கால், செல்லும் வாய் என்னோ? - இருஞ் சுரத்து
நின்றக்கால், நீடி ஒளி விடா, - நின்ற
இழைக்கு அமர்ந்த ஏய் ஏர் இளமுலையாள் ஈடு இல்
குழைக்கு அமர்ந்த நோக்கின் குறிப்பு! 68
இடைச் சுரத்துக் கண்டார் செலவு விலக்கியது
அத்தம் நெடிய; அழற் கதிரோன் செம்பாகம்
அத்தம் மறைந்தான்; இவ் அணியிழையோடு, ஒத்த
தகையினால், எம் சீறூர்த் தங்கினிராய், நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு. 69
புணர்ந்து உடன் போய தலைமகன், தலைமகளை ஆற்றுவித்துக் கொண்டு போவான், சொல்லியது
நின் நோக்கம் கொண்ட மான், தண் குரவ நீழல், காண்;
பொன் நோக்கம் கொண்ட பூங் கோங்கம் காண்; - பொன் நோக்கம்
கொண்ட சுணங்கு அணி மென் முலைக் கொம்பு அன்னாய்! -
வண்டல் அயர், மணல்மேல் வந்து! 70
சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டார் சொல்லிய வார்த்தையைத் தாங்கள் கேட்டார்க்குச் சொல்லி ஆற்றுவித்தது
அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும், மாறு இலா
வெஞ் சுடர் நீள் வேலானும், போதரக் கண்டு, அஞ்சி,
'ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக,
இரு சுடரும் போந்தன!' என்றார். 71
சுரத்திடைச் சென்ற செவிலியைத் தலைமகளைக் கண்டார் சொல்லி ஆற்றுவித்தது
'"முகம் தாமரை; முறுவல் ஆம்பல்; கண் நீலம்;
இகந்து ஆர் விரல் காந்தள்" என்று என்று, உகந்து இயைந்த
மாழை மா வண்டிற்கு ஆம் நீழல், வருந்தாதே,
ஏழைதான் செல்லும், இனிது. 72
முன்னை ஞான்று, உடன்போக்கு வலித்து, தலைமகனையும் தலைமகளையும் உடன்படுவித்து, பின்னை அறத்தொடு நிலை மாட்சிமைப்பட்டமையால் தலைமகளைக் கண்டு, தோழி உடன்போக்கு அழுங்குவித்தது
செவ் வாய், கரிய கண், சீரினால் கேளாதும்,
கவ்வையால் காணாதும், ஆற்றாதும், அவ் ஆயம்,
தார்த் தத்தை வாய் மொழியும், தண் கயத்து நீலமும்,
ஓர்த்து ஒழிந்தாள் - என் பேதை ஊர்ந்து. 73
காமம் மிக்க கழிபடர் கிளவி; நிலத்தான் பாலை; ஒழுக்கத்தான் நெய்தல்
புன் புறவே! சேவலோடு ஊடல் பொருள் அன்றால்;
அன்பு உறவே உடையார் ஆயினும், வன்புற் -
றது காண்! அகன்ற வழி நோக்கி, பொன் போர்த்து,
இது காண், என் வண்ணம், இனி! 74
மகட் போக்கிய தாய் சொல்லியது
எரிந்து சுடும் இரவி ஈடு இல் கதிரான்,
விரிந்து விடு கூந்தல் வெஃகா, புரிந்து
விடு கயிற்றின் மாசுணம் வீயும் நீள் அத்தம்,
அடு திறலான் பின் சென்ற ஆறு. 75


பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லித் தலைமகன் செலவு அழுங்கியது
நெஞ்சம்! நினைப்பினும், நெல் பொரியும் நீள் அத்தம்,
'அஞ்சல்!' என ஆற்றின், அஞ்சிற்றால்; அஞ்சி,
புடை நெடுங் காது உறப் போழ்ந்து அகன்று நீண்ட
படை நெடுங் கண் கொண்ட, பனி. 76
வினை முற்றிய தலைமகன் தலைமகளை நினைத்த இடத்து, தலைமகள் வடிவு தன் முன் நின்றாற் போல வந்து தோன்ற, அவ் வடிவை நோக்கிச் சொல்லி, ஆற்றுவிக்கின்றது
வந்தால்தான், செல்லாமோ - ஆர் இடையாய்! - வார் கதிரால்,
வெந்தால்போல் தோன்றும் நீள் வேய் அத்தம், தந்து ஆர்
தகரக் குழல் புரள, தாழ் துகில் கை ஏந்தி,
மகரக் குழை மறித்த நோக்கு? 77
'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
ஒரு கை, இரு மருப்பின், மும் மத, மால், யானை
பருகு நீர் பைஞ் சுனையில் காணாது, அருகல்,
வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார்,
அழிவிலர் ஆக, அவர்! 78
பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
சென்றார் வருதல், செறிதொடி! சேய்த்துஅன்றால்;
நின்றார் சொல் தேறாதாய், நீடு இன்றி, வென்றார்
எடுத்த கொடியின் இலங்கு அருவி தோன்றும்
கடுத்த மலை நாடு காண்! 79
உருவ வேல் கண்ணாய்! ஒரு கால் தேர்ச் செல்வன்
வெருவ, வீந்து உக்க நீள் அத்தம், வருவர்,
சிறந்து பொருள் தருவான் சேட் சென்றார் இன்றே;
இறந்து கண், ஆடும், இடம். 80
தலைமகள் இற்செறிப்புக் கண்ட பின்னை, அவள் நீங்கிய புனம் கண்டு, ஆற்றானாய் மீள்கின்ற தலைமகன் சொல்லியது; சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் சொல்லியதூஉம் ஆம்
கொன்றாய்! குருந்தே! கொடி முல்லாய்! வாடினீர்;
நின்றேன் அறிந்தேன்; நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு
என் உரைத்தீர்க்கு, என் உரைத்தாட்கு, என் உரைத்தீர்க்கு, என் உரைத்தாள் -
மின் நிரைத்த பூண் மிளிர விட்டு? 81
தலைமகனது செலவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகினது இயற்கை கூறி, ஆற்றாது உடன்படுத்துவித்தது
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால், ஆடவர்க்குப்
பூண் கடனாப் போற்றிப் புரிந்தமையால், பூண் கடனாச்
செய் பொருட்குச் செல்வரால்; - சின்மொழி! - நீ சிறிது
நை பொருட்கண் செல்லாமை நன்று. 82
தலைமகன் செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது
செல்பவோ? சிந்தனையும் ஆகாதால்; நெஞ்சு எரியும்;
வெல்பவோ, சென்றார் வினை முடிய? - நல்லாய்!
இதடி கரையும்; கல் மா போலத் தோன்றும்;
சிதடி கரையும், திரிந்து. 83
கள்ளிஅம் காட்ட கடமா இரிந்து ஓட,
தள்ளியும் செல்பவோ, தம்முடையார் - கொள்ளும்
பொருள் இலர் ஆயினும், பொங்கெனப் போந்து எய்யும்
அருள் இல் மறவர் அதர்? 84
தலைமகனைத் தோழி செலவு அழுங்குவித்தது
'பொருள் பொருள்' என்றார் சொல் பொன் போலப் போற்றி,
அருள் பொருள் ஆகாமை ஆக; அருளான்,
வளமை கொணரும் வகையினான், மற்று ஓர்
இளமை கொணர இசை! 85
தலைமகள் தோழிக்குச் செலவு உடன்படாது சொல்லியது
ஒல்வார் உளரேல், உரையாய்! - 'ஒழியாது,
செல்வார்' என்றாய்; நீ சிறந்தாயே! - செல்லாது
அசைந்து ஒழிந்த யானை, பசியால், ஆள் பார்த்து,
மிசைந்து ஒழியும் அத்தம் விரைந்து. 86
புணர்ந்து உடன்போக்கு நயப்பித்த தோழிக்குத் தலைமகள் உடன்பட்டுச் சொல்லியது
ஒன்றானும் நாம் மொழியலாமோ - செலவு தான்
பின்றாது, பேணும் புகழான் பின்; - பின்றா
வெலற்கு அரிதாம் வில் வலான், வேல் விடலை, பாங்காச்
செலற்கு அரிதாச் சேய சுரம்? 87
புணர்ந்து உடன் போவான் ஒருப்பட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது
அல்லாத என்னையும் தீர, மற்று ஐயன்மார்
பொல்லாதது என்பது நீ பொருந்தாய், எல்லார்க்கும்,
வல்லி ஒழியின், - வகைமை நீள் வாட் கண்ணாய்! -
புல்லி ஒழிவான், புலந்து. 88
சுரத்திடைச் சென்ற செவிலிக்குத் தலைமகனையும் தலைமகளையும் கண்டமை எதிர்ப்பட்டார் சொல்லி, ஆற்றுவித்தது
நண்ணி, நீர் சென்மின்; நமர் அவர் ஆபவேல்,
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ, எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன்; கண்டாளாம்,
தண்சுடர் அன்னாளை, தான். 89
'தன்னும் அவனும்' என்பதனுள், 'நன்மை தீமை' என்பதனால், நற்றாய் படிமத்தாளை வினாயது
வேறாக நின்னை வினவுவேன்; தெய்வத்தான்
கூறாயோ? கூறும் குணத்தினனாய், வேறாக -
என் மனைக்கு ஏறக் கொணருமோ? - எல்வளையைத்
தன் மனைக்கே உய்க்குமோ, தான்? 90
தலைமகன் செலவு உடன்படாத தலைமகள் தோழிக்குச் சொல்லியது
கள்ளி, சார், கார் ஓமை, நார் இல் பூ நீள் முருங்கை,
நள்ளிய வேய், வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப்
பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்து, ஆண்டு,
இருந்து உறங்கி, வீயும் இடம்? 91
செல்பவோ, தம் அடைந்தார் சீர் அழிய - சிள் துவன்றி,
கொல்பபோல் கூப்பிடும்; வெங் கதிரோன் மல்கி,
பொடி வெந்து, பொங்கி, மேல் வான் சுடும்; கீழால்
அடி வெந்து, கண் சுடும்; -ஆறு? 92
4. முல்லை
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது
கருங் கடல் மாந்திய வெண் தலைக் கொண்மூ
இருங் கடல் மா கொன்றான் வேல் மின்னி, பெருங் கடல்-
தன்போல் முழங்கி, தளவம் குருந்து அணைய,
என்கொல், யான் ஆற்றும் வகை? 93
பகல் பருகிப் பல் கதிர் ஞாயிறு கல் சேர,
இகல் கருதித் திங்கள் இருளை, பகல் வர
வெண் நிலாக் காலும் மருள் மாலை, - வேய்த்தோளாய்! -
உள் நிலாது, என் ஆவி ஊர்ந்து. 94
தோழி தலைமகளைப் பருவம் காட்டி வற்புறுத்தியது
மேல் நோக்கி வெங் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி,
கான் ஓக்கம் கொண்டு, அழகா - காண், மடவாய்! மான் நோக்கி!-
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின்மேல் புரிய,
சாதாரி நின்று அறையும், சார்ந்து. 95
மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
இருள் பரந்து ஆழியான்தன் நிறம்போல், தம்முன்
அருள் பரந்த ஆய் நிறம் போன்று, மருள் பரந்த
பால் போலும் வெண் நிலவும், - பை அரவு அல்குலாய்! -
வேல் போலும், வீழ் துணை இலார்க்கு. 96
பாழிபோல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த
ஆழிபோல் ஞாயிறு கல் சேர, தோழியோ!
மால் மாலை, தம்முன் நிறம்போல் மதி முளைப்ப,
யான், மாலை ஆற்றேன், இனைந்து. 97
'பருவம் அன்று' என்று வற்புறுத்திய தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
வீயும் - வியன் புறவின் வீழ் துளியான், மாக் கடுக்கை;
நீயும் பிறரொடும் காண், நீடாதே; - ஆயும்
கழல் ஆகி, பொன் வட்டு ஆய், தார் ஆய், மடல் ஆய்,
குழல் ஆகி, கோல் சுரியாய், கூர்ந்து. 98
'பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும்
என்? வாளா' என்றி; - இலங்கு எயிற்றாய்! - என் வாள்போல்
வாள் இழந்த, கண்; தோள் வனப்பு இழந்த; மெல் விரலும்,
நாள் இழந்த, எண் மிக்கு, நைந்து. 99
பருவம் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது
பண்டு இயையச் சொல்லிய சொல் பழுதால்; மாக் கடல்
கண்டு இயைய மாந்தி, கால்வீழ்த்து, இருண்டு, எண் திசையும்
கார் தோன்ற, காதலர் தேர் தோன்றாது; ஆகவே,
பீர் தோன்றி, நீர் தோன்றும், கண். 100
வண்டுஇனம் வெளவாத ஆம்பலும், வார் இதழான்
வண்டுஇனம் வாய் வீழா மாலையும், வண்டுஇனம்
ஆராத பூந் தார் அணி தேரான்தான் போத
வாராத நாளே, வரும். 101
மான் எங்கும் தம் பிணையோடு ஆட, மறி உகள,
வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப, கான் எங்கும்
தேன் இறுத்த வண்டோ டு, 'தீ, தா' என, தேராது,
யான் இறுத்தேன், ஆவி இதற்கு. 102
'பருவம் அன்று' என்று வற்புறுத்தின தோழிக்குத் தலைமகள், 'பருவமே' என்று அழிந்து சொல்லியது
ஒருவந்தம் அன்றால், உறை முதிரா நீரால்;
கருமம்தான் கண்டு அழிவுகொல்லோ? - 'பருவம்தான்
பட்டின்றே' என்றி; - பணைத் தோளாய்! - கண்ணீரால்
அட்டினேன், ஆவி அதற்கு. 103
பருவம் கண்டு அழிந்த கிழத்தி கொன்றைக்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது
ஐந்து உருவின் வில் எழுதி, நால் திசைக்கும், முந்நீரை,
இந்து உருவின், மாந்தி, இருங் கொண்மூ, முந்து உருவின்
ஒன்றாய், உரும் உடைத்தாய், பெய் வான்போல், 'பூக்கு' என்று,
கொன்றாய்! கொன்றாய், எற் குழைத்து. 104
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்,
கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண் - முல்லை
பெருந் தண் தளவொடு தம் கேளிரைப்போல், காணாய்,
குருந்தம் கொடுங்கழுத்தம் கொண்டு. 105
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
என்னரே, ஏற்ற துணை பிரிந்தார்? 'ஆற்று' என்பார்
அன்னரே ஆவர், அவரவர்க்கு; முன்னரே
வந்து, ஆரம், தேம் கா வரு முல்லை, சேர் தீம் தேன்
கந்தாரம் பாடும், களித்து. 106
பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது
கரு உற்ற காயாக் கண மயில் என்று அஞ்சி,
உரும் உற்ற பூங் கோடல் ஓடி, உரும் உற்ற
ஐந் தலை நாகம் புரையும் அணிக் கார்தான்
எம்தலையே வந்தது, இனி. 107
'பருவம் அன்று' என்று வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாது சொல்லியது
கண் உளவாயின், முலை அல்லை, காணலாம்;
எண் உளவாயின், இறவாவால்; எண் உளவா,
அன்று ஒழிய, நோய் மொழிச் சார்வு ஆகாது; - உருமுடை வான்
ஒன்று ஒழிய, நோய் செய்தவாறு. 108
பருவம் கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
என்போல் இகுளை! இருங் கடல் மாந்திய கார்
பொன்போல் தார் கொன்றை புரிந்தன; - பொன்போல்
துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர்; தோன்றார்,
இணை பிரிந்து வாழ்வர், இனி. 109
பெரியார் பெருமை பெரிதே! - இடர்க்கண்
அரியார் எளியர் என்று, ஆற்றா, பரிவாய்,
தலை அழுங்க, தண் தளவம் தாம் நகக் கண்டு, ஆற்றா,
மலை அழுத, சால மருண்டு. 110
கானம் கடி அரங்கா, கைம்மறிப்பக் கோடலார்,
வானம் விளிப்ப, வண்டு யாழாக, வேனல்,
வளரா மயில் ஆட, வாட்கண்ணாய்! சொல்லாய்,
உளர் ஆகி, உய்யும் வகை. 111
பருவம் காட்டி, தோழி, தலைமகளை வற்புறுத்தியது
தேரோன் மலை மறைய, தீம் குழல் வெய்து ஆக,
வாரான் விடுவானோ? - வாட்கண்ணாய்! - கார் ஆர்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண்; நாமும்
விருந்தோடு நிற்றல், விதி. 112
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பறி, ஓலை, மேலொடு கீழா, இடையர்
பிறியோலை பேர்த்து, விளியா, கதிப்ப,
நரி உளையும் யாமத்தும் தோன்றாரால் - அன்னாய்! -
விரி உளை மான் தேர் மேல் கொண்டார். 113
பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, தோழி குருந்த மரத்திற்குச் சொல்லுவாளாய், 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது
பாத்து, படு கடல் மாந்தி, பல கொண்மூ,
காத்து, கனை துளி சிந்தாமை, பூத்து, -
குருந்தே! - பருவம் குறித்து, இவளை, 'நைந்து
வருந்தே' என்றாய், நீ வரைந்து. 114
வினை முற்றி மீண்ட தலைமகன், தலைமகட்குத் தூது விடுகின்றான், தூதிற்குச் சொல்லியது
படும் தடங் கண் பல் பணைபோல் வான் முழங்கல் மேலும்,
கொடுந் தடங் கண் கூற்று மின் ஆக, நெடுந் தடங் கண்
நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு,
'தேர் நின்றது' என்னாய், திரிந்து. 115
பருவம் கண்டு, ஆற்றாளாய தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தான் ஆற்றாளாய்ச் சொல்லியது
குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே!
முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே,
அரும்பு ஈர் முலையாள் அணி குழல் தாழ் வேய்த்தோள்
பெரும் பீர் பசப்பித்தீர், பேர்ந்து. 116
தலைமகளைத் தோழி பருவம் காட்டி, வற்புறுத்தியது
கத நாகம் புற்று அடையக் கார் ஏறு சீற,
மத நாகம் மாறு முழங்க, புதல் நாகம்
பொன் பயந்த, வெள்ளி புறமாக; - பூங்கோதாய்! -
என் பசந்த, மென் தோள், இனி? 117
'பருவம் அன்று' என்று, வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் வன்புறை எதிர் அழிந்து சொல்லியது
கார் தோன்றிப் பூவுற்ற காந்தள் முகை, விளக்குப்
பீர் தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல்; நீர் தோன்றி,
தன் பருவம் செய்தது கானம்; - தடங் கண்ணாய்! -
'என் பருவம் அன்று' என்றி, இன்று. 118
'உகவும் கார் அன்று' என்பார், ஊரார்; அதனைத்
தகவும் தகவு அன்று என்று ஓரேன்; தகவேகொல்?
வண் துடுப்பு ஆய், பாம்பு ஆய், விரல் ஆய், வளை முரி ஆய்,
வெண் குடை ஆம், - தண் கோடல் வீந்து. 119
'பீடு இலார்' என்பார்கள் காணார்கொல்? - வெங் கதிரால்
கோடு எலாம் பொன் ஆய்க் கொழுங் கடுக்கை, காடு எலாம்,
அத்தம் கதிரோன் மறைவதன்முன், வண்டொடு தேன்,
துத்தம் அறையும், தொடர்ந்து. 120
ஒருத்தி யான்; ஒன்று அல பல் பகை, என்னை
விருத்தியாக் கொண்டன - வேறாப் பொருத்தின்,
மடல் அன்றில், மாலை, படு வசி, ஆம்பல்,
கடல், அன்றி, கார், ஊர், கறுத்து. 121
கானம் தலைசெய, காப்பார் குழல் தோன்ற,
ஏனம் இடந்த மணி எதிரே, வானம்
நகுவதுபோல் மின் ஆட, நாணா என் ஆவி
உகுவது போலும், உடைந்து. 122
குறித்த பருவத்தின்கண் வந்த தலைமகனைப் புணர்ந்திருந்த தலைமகள் முன்பு தன்னை நலிந்த குழல் ஓசை அந்திமாலைப் பொழுதின்கண் கேட்டதனால், துயர் உறாதாளாய்த் தோழிக்குச் சொல்லியது
இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்;
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண்; - நம்மை
எளியர் என நலிந்த ஈர்ங்குழலார், ஏடி!
தெளியச் சுடப்பட்டவாறு! 123
5. மருதம்
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
செவ்வழி யாழ்ப் பாண்மகனே! சீர் ஆர் தேர் கையினால்
இவ் வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன், - இவ் வழியே
ஆடினான், ஆய் வயல் ஊரன்; மற்று எங்கையர் தோள்
கூடினான், பின் பெரிது கூர்ந்து. 124
மாக் கோல் யாழ்ப் பாண்மகனே! யானைப் பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன், தூக்கோல்
தொடி உடையார் சேரிக்குத் தோன்றுமோ, -சொல்லாய்! -
கடி உடையேன் வாயில் கடந்து? 125
விளரி யாழ்ப் பாண்மகனே! வேண்டா; அழையேல்;
முளரி மொழியாது, உளரிக் கிளரி, நீ,
பூங் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன்,
ஆங்கண் அறிய உரை. 126
மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை
எங்கட்கு உரையாது, எழுந்து போய், இங்கண்
குலம் காரம் என்று அணுகான்; கூடும் கூத்து என்றே
அலங்கார நல்லார்க்கு அறை. 127
(இது முதல் துறைக் குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை)
செந்தாமரைப் பூ உற நிமிர்ந்த செந்நெல்லின்
பைந் தார், புனல்வாய்ப் பாய்ந்து ஆடுவாள், அம் தார்
வயந்தகம்போல், தோன்றும் வயல் ஊரன் கேண்மை
நயந்து அகன்று ஆற்றாமை நன்று. 128
வாடாத தாமரைமேல் செந்நெல் கதிர் வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் ஈடு ஆய
புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன்
நல் அகம் சேராமை நன்று. 129
இசை உரைக்கும், என் செய்து? இர நின்று அவரை;
வசை உரைப்பச் சால வழுத்தீர்; பசை பொறை
மெய்ம் மருட்டு ஒல்லா - மிகு புனல் ஊரன்தன்
பொய்ம் மருட்டுப் பெற்ற பொழுது. 130
மடங்கு இறவு போலும் யாழ்ப் பண்பு இலாப் பாண!
தொடங்கு உறவு சொல் துணிக்க வேண்டா; முடங்கு இறவு
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய்
கேட்டு உற்ற, கீழ் நாள், கிளர்ந்து. 131
எங்கையர் இல் உள்ளானே பாண! நீ பிறர்
மங்கையர் இல் என்று மயங்கினாய்; மங்கையர் இல்
என்னாது இறவாது, இவண் நின் இகந்தேகல்
பின்னார் இல் அந்தி முடிவு. 132
பாலை யாழ்ப் பாண் மகனே! பண்டு நின் நாயகற்கு
மாலை யாழ் ஓதி வருடாயோ? காலை யாழ்
செய்யும் இடம் அறியாய்; சேர்ந்தாய்; நின் பொய்ம்மொழிக்கு
நையும் இடம் அறிந்து, நாடு. 133
கிழமை பெரியோர்க்குக் கேடு இன்மைகொல்லோ?
பழமை பயன் நோக்கிக் கொல்லோ? கிழமை
குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா,
அடி நாயேன் பெற்ற அருள். 134
என் கேட்டி ஏழாய்! இரு நிலத்தும் வானத்தும்,
முன் கேட்டும் கண்டும், முடிவு அறியேன்; பின் கேட்டு,
அணி இகவா நிற்க, அவன் அணங்கு மாதர்
பணி இகவான், சாலப் பணிந்து. 135
எங்கை இயல்பின் எழுவல்; யாழ்ப் பாண் மகனே!
தம் கையும் வாயும் அறியாமல், இங்கண்
உளர உளர, உவன் ஓடிச் சால,
வளர வளர்ந்த வகை. 136
கருங் கோட்டுச் செங் கண் எருமை, கழனி
இருங் கோட்டு மென் கரும்பு சாடி, வரும் கோட்டால்
ஆம்பல் மயக்கி, அணி வளை ஆர்ந்து, அழகாத்
தாம் பல் அசையின, வாய் தாழ்ந்து. 137
கன்று உள்ளிச் சோர்ந்த பால் கால் ஒற்றி, தாமரைப்பூ
அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான், சென்று உள்ளி,
'வந்தையா!' என்னும் வகையிற்றே - மற்று இவன்
தந்தையார் தம் ஊர்த் தகை. 138
மருதோடு காஞ்சி அமர்ந்து உயர்ந்த நீழல்,
எருதோடு உழல்கின்றார் ஓதை, குருகோடு
தாராத் தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே -
ஊராத் தேரான் தந்தை ஊர். 139
மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று
உண்ணாப் பூந் தாமரைப் பூ உள்ளும்; - கண் ஆர்
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்,
மயல் ஊர் அரவர் மகள். 140
அணிக் குரல்மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன,
மணிக் குரல்மேல் மாதராள் ஊடி, மணிச் சிரல்
பாட்டை இருந்து அயரும் பாய் நீர்க் கழனித்தே -
ஆட்டை இருந்து உறையும் ஊர். 141
தண் கயத்துத் தாமரை, நீள் சேவலைத் தாழ் பெடை
புண் கயத்து உள்ளும் வயல் ஊர! வண் கயம்
போலும் நின் மார்பு, புளி வேட்கைத்து ஒன்று; இவள்
மாலும் மாறா நோய் மருந்து. 142
நல் வயல் ஊரன் நறுஞ் சாந்து அணி அகலம்
புல்லி, புடை பெயரா மாத்திரைக்கண், புல்லியார்
கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப,
பாட்டு முரலுமாம், பண். 143
அரத்தம் உடீஇ, அணி பழுப்பப் பூசி,
சிரத்தையால் செங்கழுநீர் சூடி, பரத்தை
நினை நோக்கிக் கூறினும், 'நீ மொழியல்' என்று,
மனை நோக்கி, மாண் விடும். 144
பாட்டு அரவம், பண் அரவம், பணியாத
கோட்டு அரவம், இன்னிவை தாம் குழும, கோட்டு அரவம்
மந்திரம் கொண்டு ஓங்கல் என்ன, மகச் சுமந்து,
இந்திரன்போல் வந்தான், இடத்து. 145
மண் கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியராய்
எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக, பெண் கிடந்த
தன்மை ஒழிய, தரள முலையினாள்
மென்மை செய்திட்டாள், மிக. 146
செங் கண் கருங் கோட்டு எருமை சிறுகனையா
அங்கண் கழனிப் பழனம் பாய்ந்து, அங்கண்
குவளை அம் பூவொடு செங் கயல் மீன் சூடி,
தவளையும் மேற்கொண்டு வரும். 147
இருள் நடந்தன்ன இருங் கோட்டு எருமை,
மருள் நடந்த மாப் பழனம் மாந்திப் - பொருள் நடந்த
கல் பேரும் கோட்டால் கனைத்து, தம் கன்று உள்ளி,
நெல் போர்பு சூடி வரும். 148
புண் கிடந்த புண்மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும்,
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ; பண் கிடந்து
செய்யாத மாத்திரையே, செங்கயல்போல் கண்ணினாள்
நையாது தான் நாணுமாறு. 149
கண்ணுங்கால் என்கொல்? கலவை யாழ்ப் பாண் மகனே!
எண்ணுங்கால், மற்று இன்று; இவளொடு நேர் எண்ணின்,
கடல் வட்டத்து இல்லையால்; கல் பெயர் சேராள்;
அடல் வட்டத்தார் உளரேல் ஆம். 150
சேறு ஆடும் கிண்கிணிக் கால் செம் பொன் செய் பட்டத்து,
நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா; வேறு ஆய
மங்கையர் இல் நாடுமோ? - மாக் கோல் யாழ்ப் பாண் மகனே! -
எங்கையர் இல் நாடலாம் இன்று. 151
முலையாலும், பூணாலும், முன்கண் தாம் சேர்ந்த
விலையாலும், இட்ட குறியை உலையாது
நீர் சிதைக்கும் வாய்ப் புதல்வன் நிற்கும், முனை; முலைப்பால்
தார் சிதைக்கும்; வேண்டா, தழூஉ. 152
துனி, புலவி, ஊடலின் நோக்கேன்; தொடர்ந்த
கனி கலவி காதலினும் காணேன்; முனிவு அகலின்,
நாணா நடுக்கும்; நளி வயல் ஊரனைக்
காணா, எப்போதுமே, கண். 153

சிறப்புப் பாயிரம்
முனிந்தார் முனிவு ஒழிய, செய்யுட்கண் முத்துக்
கனிந்தார் களவியல் கொள்கைக்கு அணிந்தார்-
இணை மாலை ஈடு இலா இன் தமிழால் யாத்த
திணைமாலை கைவரத் தேர்ந்து.

No comments: