Saturday, October 27, 2007

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-ஐந்திணை எழுபது

மூவாதியார் இயற்றிய ஐந்திணை எழுபது
ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது என பெயர் பெற்றது. இந் நூலின் முதலில் விநாயகரைக் குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று உள்ளது. இக் கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாதலோடு, இதற்குப் பழைய உரைகாரர் உரை எழுதாமையாலும், இச் செய்யுள் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூற இயலாது. இச் செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. ஐந்திணை நூல்களில் வேறு ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்து பாடல் இல்லாமையும் சிந்திக்கத் தக்கது. இந் நூலில் உள்ள 70 பாடலகளில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26), நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்துபட்டன. இந் நூலை ஆக்கியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர்.


1. குறிஞ்சி
தோழி தலைமகனை வரைவு கடாயது
அவரை பொருந்திய பைங் குரல் ஏனல்
கவரி மட மா கதூ உம் படர் சாரல்
கானக நாட! மறவல், வயங்கிழைக்கு
யான் இடை நின்ற புணை. 1

கொல்லைப் புனத்த அகில் சுமந்து, கல் பாய்ந்து,
வானின் அருவி ததும்ப, கவினிய
நாடன் நயம் உடையன் என்பதனால், நீப்பினும்,
வாடல் மறந்தன, தோள். 2

தோழி தலைமகன் வரைவு மலிந்தமை தலைமகட்குச் சொல்லியது
இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில்,
குலையுடைக் காந்தள், இன வண்டு இமிரும்
வரையக நாடனும் வந்தான்; மற்று அன்னை
அலையும் அலை போயிற்று, இன்று. 3

தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு, உவந்து, மந்தி முலை வருட, கன்று அமர்ந்து,
ஆமா சுரக்கும் அணி மலை நாடனை
யாமாப் பிரிவது இலம். 4

சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல்
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை
நயம் திகழும் என்னும், என் நெஞ்சு. 5

புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை
நல் மலை நாட! மறவல்; வயங்கிழைக்கு
நின் அலது இல்லையால்; ஈயாயோ, கண்ணோட்டத்து
இன் உயிர் தாங்கும் மருந்து? 6

பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக,
படைத்து மொழி கிளவியால் தோழி வரைவு கடாயது
காய்ந்தீயல், அன்னை! இவளோ தவறு இலள்; -
ஓங்கிய செந் நீர் இழிதரும் கான் யாற்றுள்,
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட,
தாம் சிவப்பு உற்றன, கண். 7

புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
வெறி கமழ் தண் சுனைத் தெண்ணீர் துளும்ப,
கறி வளர் தே மா நறுங் கனி வீழும்
வெறி கமழ் தண் சோலை நாட! ஒன்று உண்டோ ,
அறிவின்கண் நின்ற மடம்? 8

தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
மன்றத் துறுகல் கருங் கண் முசு உகளும்
குன்றக நாடன் தெளித்த தெளிவினை
நன்று என்று தேறித் தெளிந்தேன், தலையளி
ஒன்று; மற்று ஒன்றும் அனைத்து. 9

தோழி தலைமகனைக் கண்டு வரைவு கடாயது
பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல்
மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
வரையக நாட! வரையாய வரின், எம்
நிரைதொடி வாழ்தல் இலள். 10

தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் கேட்ப, இயற்பட மொழிந்தது
கேழல் உழுத கரி புனக் கொல்லையுள்,
வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும்
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான், என் தோழி
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல். 11

தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து. 12

வெறியாட்டு எடுத்துக்கொண்ட இடத்து, தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது
வார் குரல் ஏனல் வளை வாய்க் கிளி கவரும்,
நீரால் தெளி திகழ், கான் நாடன் கேண்மையே
ஆர்வத்தின் ஆர முயங்கினேன்; வேலனும்
ஈர, வலித்தான், மறி. 13

தலைமகன் வரும் வழியின் ஏதத்திற்குக் கவன்ற தலைமகள் வரைவு வேட்டு, தோழிக்குச் சொல்லியது
குறை ஒன்று உடையேன்மன்; - தோழி! - நிறை இல்லா
மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும்; இன்னே,
அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல்,
'இரா வாரல்' என்பது உரை. 14

2. முல்லை
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
செங் கதிர்ச் செல்வன் சினம் கரந்த போழ்தினால்,
பைங் கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிர,
காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும்
நீரோடு அலமரும், கண். 15

தட மென் பணைத் தோளி! நீத்தாரோ வாரார்;
மட நடை மஞ்ஞை அகவ, கடல் முகந்து,
மின்னோடு வந்தது எழில் வானம்; வந்து, என்னை,
'என் ஆதி?' என்பாரும் இல். 16

தண் நறுங் கோடல் துடுப்பு எடுப்ப, கார் எதிரி
விண் உயர் வானத்து உரும் உரற்ற, திண்ணிதின்
புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை,
கொல்லுநர் போல, வரும். 17

கதழ் உறை வானம் சிதற, இதழகத்துத்
தாது இணர்க் கொன்றை எரி வளர்ப்ப, பாஅய்
இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி,
துடிப்பது போலும், உயிர். 18

ஆலி விருப்புற்று அகவி, புறவி எல்லாம்
பீலி பரப்பி, மயில் ஆல, சூலி
விரிகுவது போலும் இக் கார் அதிர, ஆவி
உருகுவது போலும், எனக்கு. 19

இனத்த அருங் கலை பொங்க, புனத்த
கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப, இடி மயங்கி,
யானும் அவரும் வருந்த, சிறு மாலை-
தானும் புயலும் வரும். 20

காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்,
கார்க் கொடி முல்லை எயிறு ஈன, காரோடு
உடன்பட்டு வந்து அலைக்கும் மாலைக்கோ, எம்மின்
மடம் பட்டு வாழ்கிற்பார் இல். 21

கொன்றைக் குழல் ஊதிக் கோவலர் பின் நிரைத்து,
கன்று அமர் ஆயம் புகுதர, இன்று
வழங்கிய வந்தன்று, மாலை; யாம் காண,
முழங்கி, வில் கோலிற்று, வான். 22

பருவம் கண்டு அழிந்த தலைமகள் சொல்லியது
தேரைத் தழங்குரல் தார் மணி வாய் அதிர்ப்ப,
ஆர் கலி வானம் பெயல் தொடங்கி, கார் கொள,
இன்று ஆற்ற வாரா விடுவார்கொல், காதலர்?
ஒன்றாலும் நில்லா, வளை. 23
கல் ஏர் புறவில் கவினி, புதல்மிசை
முல்லை தளவொடு போது அவிழ, எல்லி
அலைவு அற்று விட்டன்று வானமும்; உண்கண்,
முலை வற்று விட்டன்று, நீர். 24

[இது முதல் துறைக்குறிப்புகள் கிடைக்கவில்லை]
................. 25
................. 26

கார்ப்புடைப் பாண்டில் கமழ, புறவு எல்லாம்
ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட, நீர்த்து அன்றி
ஒன்றாது அலைக்கும் சிறு மாலை, மால் உழந்து
நின்றாக நின்றது நீர். 27

குருந்து அலை வான் படலை சூடிச் சுரும்பு ஆர்ப்ப,
ஆயன் புகுதரும் போழ்தினான், ஆயிழாய்!
பின்னொடு நின்று ..... படு மழை கொ ....ல்
என்னொடு பட்ட வகை. 28

3. பாலை
எழுத்துடைக் கல் நிரைக்க வாயில் விழுத் தொடை
அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து, அம் மாப்
பெருந் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள்
ஆகும், அவர் காதல் அவா. 29

வில் உழுது உண்பார் கடுகி அதர் அலைக்கும்
கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல்-
மெல் இயல் கண்ணோட்டம் இன்றி, பொருட்கு இவர்ந்து,
நில்லாத உள்ளத்தவர்? 30

பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்துப்
பாழ் ஊர்ப் பொதியில் புகாப் பார்க்கும் ஆர் இடை,
சூழாப் பொருள் நசைக்கண் சென்றோர், அருள் நினைந்து,
வாழ்தியோ மற்று என் உயிர்? 31

நீர் இல் அருஞ் சுரத்து ஆமான்இனம் வழங்கும்
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல்? - ஆயிழாய்! -
நாணினை நீக்கி, உயிரோடு உடன் சென்று
காண, புணர்ப்பதுகொல் நெஞ்சு? 32

பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த,
நெறி தூர் அருஞ் சுரம் நாம் உன்னி, அறிவிட்டு
அலர் மொழிச் சென்ற கொடி அக நாட்ட,
வலன் உயர்ந்து தோன்றும் மலை. 33

பீர் இவர் கூரை மறு மனைச் சேர்ந்து அல்கி,
கூர் உகிர் எண்கின் இருங் கிளை கண்படுக்கும்,
நீர் இல், அருஞ் சுரம் முன்னி அறியார்கொல்,
ஈரம் இல் நெஞ்சினவர்? 34

சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும்
தேரொடு கானம், தெருள் இலார் செல்வார்கொல்,
ஊர் இடு கவ்வை ஒழித்து? 35

முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை,
புள்ளி வெருகு தன் குட்டிக்கு இரை பார்க்கும்
கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. 36

பொரி புற ஓமைப் புகர் படு நீழல்,
வரி நுதல் யானை பிடியோடு உறங்கும்
எரி மயங்கு கானம் செலவு உரைப்ப, நில்லா,
அரி மயங்கு உண்கண்ணுள் நீர். 37

கோள் வல் .... வய மாக் குழுமும்
தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்-
ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்று உணரா
மீளி கொள் மொய்ம்பினவர்? 38

கொடுவரி பாயத் துணை இழந்து அஞ்சி,
கடு உணங்கு பாறைக் கடவு தெவுட்டும்
நெடு வரை அத்தம் இறப்பர்கொல், கோள் மாப்
படு பகை பார்க்கும் சுரம்? 39

மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்ப,
குன்றகம் நண்ணி, குறும்பு இறந்து சென்றவர்
உள்ளிய தன்மையர்போலும் - அடுத்து அடுத்து
ஒள்ளிய தும்மல் வரும். 40

பூங் கண் இடம் ஆடும்; கனவும் திருந்தின;
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப,
வீங்கிய மென் தோள் கவினிப் பிணி தீர,
பாங்கத்துப் பல்லி படும். 41

'ஒல்லோம்!' என்று ஏங்கி, உயங்கி இருப்பவோ?
கல் இவர் அத்தம், அரி பெய் சிலம்பு ஒலிப்பக்
கொல் களிறு அன்னான்பின் செல்லும்கொல், என் பேதை
மெல் விரல் சேப்ப நடந்து? 42

4. மருதம்
ஆற்றல் உடையன், அரும் பொறி நல் ஊரன்,
மேற்றுச் சிறு தாய காய்வு அஞ்சி, போற்று உருவிக்
கட்டக முத்தின் புதல்வனை மார்பின்மேல்
பட்டம் சிதைப்ப வரும். 43

அகன் பணை ஊரனைத் தாமம் பிணித்தது
இகன்மை கருதி இருப்பல்; - முகன் அமரா
ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ,
பேதைமை கண்டு ஒழுகுவார்? 44

போத்து இல் கழுத்தின் புதல்வன் உணச் சான்றான்;
மூத்தேம் இனி யாம்; வரு முலையார் சேரியுள்,
நீத்து நீர் ஊன வாய்ப் பாண! நீ போய் மொழி;
கூத்தாடி உண்ணினும் உண். 45

உழலை முருக்கிய செந் நோக்கு எருமை
பழனம் படிந்து, செய் மாந்தி, நிழல் வதியும்,
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற,
பெண்டிர்க்கு உரை - பாண! - உய்த்து. 46

தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனைப்
பூங் கண் புதல்வன் மிதித்து உழக்க, ஈங்குத்
தளர் முலை பாராட்டி, என்னுடைய பாவை
வளர் முலைக்கண் ஞெமுக்குவார். 47

பேதை! புகலை; புதல்வன் துணைச் சான்றோன்
ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும்?
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள்
ஓவாது செல் - பாண! - நீ. 48

யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல்; என்னுடைய
பாண! இருக்க அது களை; நாண் உடையான்
தன் உற்ற எல்லாம் இருக்க; இரும் பாண!
நின் உற்றதுண்டேல், உரை. 49

ஒள் இதழ்த் தாமரைப் போது உறழும் ஊரனை
உள்ளம்கொண்டு உள்ளான் என்றுயார்க்கு உரைக்கோ?-ஒள்ளிழாய்!-
அச்சுப் பணி மொழி உண்டேனோ, மேல் நாள் ஓர்
பொய்ச் சூள் என அறியாதேன்? 50

பேதையர் என்று தமரைச் செறுபவோ?
போது உறழ் தாமரைக்கண் ஊரனை நேர் நோக்கி,
வாய் மூடி இட்டும் இருப்பவோ?- மாணிழாய்! -
நோவது என்? மார்பு அறியும், இன்று. 51

காதலின் தீரக் கழிய முயங்கன்மின்;
ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனைப்
பேதைப் பட்டு ஏங்கன்மின் நீயிரும், எண் இலா
ஆசை ஒழிய உரைத்து. 52

'உள் நாட்டம் சான்றவர் தந்த நசை இற்று என்று
எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும்' என்று எண்ணி,
வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன்
பழிபாடு நின் மேலது. 53

உண் துறைப் பொய்கை வராஅல்இனம் இரியும்
தண் துறை ஊர! தகுவதோ, - ஒண்டொடியைப்
பாராய், மனை துறந்து, அச் சேரிச் செல்வதனை
ஊராண்மை ஆக்கிக்கொளல்? 54

பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல்! என்னுடைய
எவ்வம் எனினும், எழுந்தீக; வைகல்
மறு இல் பொலந் தொடி வீசும், அலற்றும்,
சிறுவன் உடையேன் துணை. 55

வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர்
வளைஇய சக்கரத்து ஆழி, கொளை பிழையாது,
ஒன்று இடைஇட்டு வருமேல், நின் வாழ் நாட்கள்
ஒன்றி அனைத்தும் உளேன். 56

5. நெய்தல்
ஒழுகு திரைக் கரை வான் குருகின் தூவி
உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப்
பேதையான் என்று உணரும், நெஞ்சம்; இனிது உண்மை
ஊதியம் அன்றோ உயிர்க்கு? 57

என்னைகொல்? தோழி! அவர்கண்ணும் நன்கு இல்லை;
அன்னைமுகனும் அது ஆகும்; பொன் அலர்
புன்னை அம் பூங் கானற் சேர்ப்பனை, 'தக்க தேர்;
நின் அல்லது இல்' என்று உரை. 58

இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன்
கடு மான் மணி அரவம் என்று, கொடுங்குழை
புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தாள் - 'சிறு குடியர்
உள் அரவம் நாணுவர்' என்று. 59

மணி நிற நெய்தல் இருங் கழிச் சேர்ப்பன்
அணி நலம் உண்டு அகன்றான்; என்கொல், எம்போல்
தணி மணல் எக்கர்மேல் ஓதம் பெயர,
துணி முந்நீர் துஞ்சாதது? 60

கண் திரள் முத்தம் பயக்கும் இரு முந்நீர்ப்
பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை
முண்டகக் கானலுள் கண்டேன் எனத் தெளிந்தேன்,
நின்ற உணர்வு இலாதேன். 61

'அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும்
கொடுங் கழிச் சேர்ப்பன் அருளான்' எனத் தெளிந்து,
கள்ள மனத்தான் அயல் நெறிச் செல்லும்கொல்,
நல் வளை சோர, நடந்து? 62

கள் நறு நெய்தல் கமழும் கொடுங் கழித்
தண்ணம் துறைவனோ தன் இலன்; ஆயிழாய்!
வள்நகைப்பட்டதனை ஆண்மை எனக் கருதி,
பண் அமைத் தேர்மேல் வரும். 63

தெண் நீர் இருங் கழி, வேண்டும் இரை மாந்தி,
பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்!
தண்ணம் துறைவற்கு உரையாய், 'மடமொழி
வண்ணம் தா' என்று தொடுத்து. 64

எறி சுறாக் குப்பை இனம் கலக்கத் தாக்கும்
எறி திரைச் சேர்ப்பன் கொடுமை அறியாகொல் -
கானகம் நண்ணி அருள் அற்றிடக் கண்டும்,
கானலுள் வாழும் குருகு? 65

நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த
பல் மீன் உணங்கல் கவரும் துறைவனைக்
கண்ணினால் காண அமையும்கொல்? 'என் தோழி
வண்ணம் தா' என்கம், தொடுத்து. 66

இவர் திரை நீக்கியிட்டு, எக்கர் மணல்மேல்
கவர் கால் அலவன் தன பெடையோடு,
தவழும் இருங் கழிச் சேர்ப்ப! என் தோழி-
படர் பசலை பாயின்று - தோள். 67

சிறு மீன் கவுள் கொண்ட செந் தூவி நாராய்!
இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி,
நெறி நீர் இருங் கழிச் சேர்ப்பன் அகன்ற
நெறி அறிதி, மீன் தபு நீ. 68

................. 69
................. 70

நூலைச் சேர்ந்ததாக ஊகிக்கும் பாடல்
முடம் முதிர் புன்னைப் படுகோட்டு இருந்த
மடமுடை நாரைக்கு உரைத்தேன் - கடன் அறிந்து
பாய்திரைச் சேர்ப்பன் பரித் தேர் வர, கண்டு,
'நீ தகாது' என்று நிறுத்து.
மிகைப் பாடல்
கடவுள் வாழ்த்து
எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து, எமக்கு
நண்ணும் கலை அனைத்தும் நல்குமால் - கண்ணுதலின்
முண்டத்தான், அண்டத்தான், மூலத்தான், ஆலம் சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு.

1 comment:

சரவணன் said...

Thanks for the awesome work. It's very useful for me.