Saturday, October 27, 2007

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-கைந்நிலை

புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. திணைமொழி ஐம்பதும் இவ் வகை வரிசை முறையிலே அமைந்திருத்தல் கவனிக்கத்தக்கது. இந் நூற் செய்யுட்களில் 18 பாடல்கள் சிதைந்துள்ளன (1, 8, 14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைந்துள்ளன. ஏனைய பதினைந்தின் அடிகளும் சொற்களும் பல் வேறு வகையில் சிதைந்துள்ளன. எவ்வித சிதைவும் இன்றி உள்ளவை நெய்தல் திணைப் பகுதியில் அமைந்துள்ள பாடல்களே. இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பது நூல் இறுதிக் குறிப்பில் காணப்படுகிறது. எனவே நூலாசிரியர் பெயர் புல்லங்காடனார் என்பதும், இவர் தந்தையார் பெயர் காவிதியார் என்பதும் விளங்கும். இவர் தந்தையார் அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப் பெற்றவராக இருத்தல் கூடும். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவார்.


1. குறிஞ்சி
வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல்
நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல்
கானக நாடன் கலந்தான்இலன் என்று,
மேனி சிதையும், பசந்து. 1

வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்
வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என்
நெஞ்சம் நடுங்கி வரும்! 2

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
பாசிப் பசுஞ் சுனைப் பாங்கர், அழி முது நீர்
காய் சின மந்தி பயின்று, கனி சுவைக்கும்,
பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு
ஆசையின் தேம்பும், என் நெஞ்சு. 3

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
ஓங்கல் விழுப் பலவின் இன்பம் கொளீஇய
தீம் கனி மாவின் முசுப் பாய் மலை நாடன்
தான் கலந்து உள்ளாத் தகையனோ, - நேரிழாய்! -
தேம் கலந்த சொல்லின் தெளித்து? 4

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
இரசம் கொண்டு இன் தேன் இரைக்கும் குரலைப்
பிரசை இரும் பிடி பேணி வரூஉம்
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு, என் தோள்
நிரையம் எனக் கிடந்தவாறு! 5

மரையா உகளும் மரம் பயில் சோலை,
உரை சால் மட மந்தி ஓடி உகளும்
புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம்
உரையா வழங்கும், என் நெஞ்சு. 6

கல் வரை ஏறி, கடுவன், கனி வாழை
எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு,
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை
சொல்ல, சொரியும், வளை. 7

தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்
கருங் கைக் கத வேழம், கார்ப் பாம்புக் குப்பங்
கி . . .க் கொண் . . . . . . . . . . . . . கரும்
பெருங் கல் மலை நாடன் பேணி வரினே,
சுருங்கும், இவள் உற்ற நோய். 8

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
காந்தள் அரும் பகை என்று, கத வேழம்
ஏந்தல் மருப்பிடைக் கை வைத்து, இனன் நோக்கி,
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன்
காய்ந்தான்கொல், நம்கண் கலப்பு? 9

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
பொன் இணர் வேங்கைப் புனம் சூழ் மலை நாடன்,
மின்னின் அனைய வேல் ஏந்தி, இரவினுள்
இன்னே வரும்கண்டாய் - தோழி! - இடை யாமத்து
என்னை இமை பொருமாறு? 10

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி
பொறி கிளர் மஞ்ஞை புகன்று குடையும்
முறி கிளர் நல் மலை நாடன் வருமே-
அறி துறைத்து, இவ் அல்லில் நமக்கு. 11

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
நாக நறு மலர், நாள் வேங்கைப் பூ, விரவி,
கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக,
'முடியும்கொல்?' என்று முனிவான் ஒருவன்
வடி வேல் கை ஏந்தி, வரும். 12

2. பாலை
வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்
கடுகி அதர் அலைக்கும் கல் சூழ் பதுக்கை
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும்
நெடு இடை அத்தம் செலவு உரைப்பக் கேட்டே,
வடுவிடை மெல்கின, கண். 13

வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்
கத நாய் துரப்ப, .... .... .... ..... ..... ..... ....
.... .... .... .... .... ..... ..... ...... ..... யவிழும்
புதல் மாறு வெங் கானம் போக்கு உரைப்ப, நில்லா,
முதன் ..... ..... ..... .... ..... .... .... .... ..... 14

.... .... .... ..... ..... ..... ..... ..... .... ..... .... .... ....
.... .... .... ..... ..... ..... ..... ..... .... ..... .... .... ....
கடுங் கதிர் வெங் கானம் பல் பொருட்கண் சென்றார்,
கொடுங் கல் மலை .... .... .... ..... ..... ..... 15

..... ..... ...... ...வுறையும் மெல்லென் கடத்து .... ......
கடுஞ் சின வேங்கை கதழ் வேழம் சாய்க்கு
..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... .....
..... ..... ..... ..... ..... ..... ..... நமர். 16

கடமா இரிந்தோடும் கல் அதர் அத்தம்,
மட மா இரும்பிடி வேழ மரு .... .... .... .... ....
..... ..... ..... ...ண்ட வுண் கண்ணுள் நீர் ..... ..... .....
..... ...... ..... ..... ..... ...... ...... ..... 17

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது
ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை,
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும்
தாம் மாண்பு இல் வெஞ் சுரம் சென்றார் வரக் கண்டு,
வாய் மாண்ட பல்லி படும். 18

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது
அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல்,
செருக்கு இல் கடுங் களிறு சென்று உறங்கி நிற்கும்,
பரல் கானம் பல் பொருட்குச் சென்றார் வருவர்;
நுதற்கு இவர்ந்து ஏறும், ஒளி. 19

.... .... ..... ..... ..... ..... ..... .... ..... ....... ..... ....
.... .... ..... ..... ..... ..... ..... .... ..... .......விழ்க்கும்
ஓவாத வெங் கானம் சென்றார் ..... ...... ...... .....
..... ..... ..... வார் வருவார், நமர். 20

பிரிவிடை ஆற்றாத தலைவி தோழிக்குச் சொல்லியது
ஆந்தை குறுங்கலி கொள்ள, நம் ஆடவர்
காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின்,-
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய்! - என் நெஞ்சு
நீந்தும், நெடு இடைச் சென்று. 21

பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது
கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்
உள்ளம் பிரிந்தமை நீ அறிதி - ஒள்ளிழாய்! -
தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்து, அவர்
வல்லை நாம் காணும் வரவு. 22

'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
சிலை ஒலி வெங் கணையர், சிந்தியா நெஞ்சின்
கொலை புரி வில்லொடு கூற்றுப்போல், ஓடும்
இலை ஒலி வெங் கானத்து, இப் பருவம் சென்றார்
தொலைவு இலர்கொல் - தோழி! - நமர்? 23

ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது
வெஞ் சுரம் தேர் ஓட வெஃகி நின்று, அத்த மாச்
சிந்தையால் நீர் என்று செத்து, தவா ஓடும்
பண்பு இல் அருஞ் சுரம் என்பவால் - ஆய்தொடி! -
நண்பு இலார் சென்ற நெறி. 24

3. முல்லை
பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது
கார் செய் புறவில் கவினிக் கொடி முல்லை
கூர் எயிறு ஈன, குருந்து அரும்ப, ஓரும்
வருவர் நம் காதலர்; - வாள் தடங் கண்ணாய்!-
பருவரல், பைதல் நோய் கொண்டு! 25

பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது
குருதி மலர்த் தோன்றி கூர் முகை ஈன,
.... .... சேவல் எனப் பிடவம் ஏறி,
பொரு தீ என வெருளும்; - பொன் நேர் நிறத்தாய்! -
அரிது, அவர் வாராவிடல். 26

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... .... ..... ..... ....ர ஒல்கப் புகுதரு
கார் தரு மாலை கலந்தார் வரவு உள்ளி,
ஊர் தரும், மேனி பசப்பு. 27

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... பெய்த புறவில் கடுமான் தேர்
ஒல்லைக் கடாவார்; இவர்காணின் காதலர்;
சில் .... .... .... ..... .... ..... ..... ..... 28

.... .... .... ..... .... ..... ....... குருந்து அலர,
பீடு ஆர் இரலை பிணை தழுவ, காடு ஆர,
கார் வானம் வந்து முழங் ..... ..... ..... ..... .....
.... .... .... ..... .... ..... ..... ..... .... 29

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
கொன்றைக் கொடுங் குழல் ஊதிய கோவலர்
மன்றம் புகுதரும் போழ்து. 30

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... வானம்
வந்து துளி வழங்கக் கண்டு. 31

கார் எதிர் வானம் கதழ் எரி சி.... ......
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
..... ..... லக மெழு நெஞ்சே! செல்லாயால்,
கூர் எரி மாலைக் குறி. 32

தளை அவிழ் தே.... ..... ..... ..... ...... ...... ......
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
உளையார் கலி நன் மாப் பூட்டி வருவார்,
களையாரோ, நீ உற்ற நோய்? 33

முல்லை எயிறு ஈன ..... .... ..... ..... ..... ....
..... .... .... ..... ........ .....ன மல்கி,
கடல் முகந்து கார் பொழிய, காதலர் வந்தாரர்
உடன் இயைந்த கெ.... ...... 34

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
..... .... ....ர டைப் பால் வாய் இடையர்
தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால்,
அரித .... .... ..... ..... ..... ..... 35

தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்
பிடவம் குருந்தொடு பிண்டி மலர,
மடவ மயில் கூவ, மந்தி மா கூர, -
தட மலர்க் கோதையாய்! - தங்கார் வருவர்,
இடபம் எனக் கொண்டு, தாம். 36

4. மருதம்
பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக் கூறியது
கழனி உழவர் கலி அஞ்சி ஓடி,
தழென மத எருமை தண் கயம் பாயும்
பழன வயல் ஊரன் பாண! எம் முன்னர்,
பொழெனப் பொய் கூறாது, ஒழி. 37

பரத்தைமாட்டுப் பயின்று வரும் தலைமகனைப் புலந்து, தலைமகள் சொல்லியது
கயல் இனம் பாயும் கழனி நல் ஊர!
நயம் இலேம் எம் மனை இன்றொடு வாரல்;
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின்,
குயி ..... ..... ..... கொண்டு. 38

தலைவன் மகற்கொண்டு வரும் சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது
முட்ட முது நீர் அடை கரை மேய்ந்து எழுந்து,
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன்
கட்டு அலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டு, எம் இல்
சுட்டி அலைய வரும். 39

வாயில் வேண்டிய பாணற்குத் தோழி வாயில் மறுத்தது
தாரா இரியும் தகை வயல் ஊரனை
வாரான் எனினும், 'வரும்' என்று, சேரி
புலப்படும் சொல்லும், இப் பூங் கொடி அன்னாள்
கலப்புஅடும் கூடும்கொல் மற்று? 40

வாயிலாகிய பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப, என் உடையை?
அஃது அன்று எனினும், அறிந்தேம் யாம் செய்தி
நெறியின், - இனிய சொல் நீர் வாய் மழலைச்
சிறுவன் எமக்கு உடைமையால். 41

நீத்த நீர் ஊரன் நிலைமையும், வண்ணமும்,
யார்க்கு உரைத்தி - பாண! - அதனால் யாம் என் செய்தும்?
கூத்தனாக் கொண்டு, குறை நீ உடையையேல்,
ஆட்டுவித்து உண்ணினும் உண். 42

போது அவிழ் தாமரைப் பூந் துறை ஊரனைத்
தாது அவிழ் கோதைத் தகை இயலார் தாம் புலப்பர்;
ஏதின்மை சொல்லி இருப்பர், பிறர் மகளிர்,
பேதைமை தம்மேலே கொண்டு. 43

வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது
தண் துறை ஊரன், - தட மென் பணைத் தோளாய்!-
'வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து,
கோல வன முலையும் புல்லினான்' என்று எடுத்து,
சாலவும் தூற்றும், அலர். 44

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது
மூத்தேம், இனி; - பாண! - முன்னாயின், நாம் இளையேம்;
கார்த் தண் கலி வயல் ஊரன், கடிது, எமக்குப்
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி,
நீத்தல் அறிந்திலேம், இன்று. 45

கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன்,
நயமே பல சொல்லி, நாணினன் போன்றான்;-
பயம் இல் யாழ்ப் பாண! - பழுது ஆய கூறாது,
எழு நீ போ, நீடாது மற்று. 46

அரக்கு ஆம்பல், தாமரை, அம் செங்கழுநீர்,
ஒருக்கு ஆர்ந்த வல்லி, ஒலித்து ஆரக் குத்தும்
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய், - பாண!-
இருக்க, எம் இல்லுள் வரல். 47

கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம்
மிக்க வன முலை புல்லான், பொலிவு உடைத்தா;-
தக்க யாழ்ப் பாண! - தளர் முலையாய் மூத்து அமைந்தார்
உத்தரம் வேண்டா; வரல். 48

5. நெய்தல்
நாவாய் வழங்கு நளி திரைத் தண் கடலுள்
ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறாக்குப்பை!
பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய் - பரியாது,
நோயால் நுணுகியவாறு. 49

நெடுங் கடல் தண் சேர்ப்ப! நின்னோடு உரையேன்;
ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்;
கடுஞ் சூளின் தான் கண்டு, கானலுள் மேயும்
தடந் தாள் மட நாராய்! கேள். 50

மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய்!
அணி நலம் உண்டு இறந்து, (ந)ம் அருளா விட்ட
துணி முந்நீர்ச் சேர்ப்பற்குத் தூதோடு வந்த
பணி மொழிப் புள்ளே! பற. 51

அன்னையும் இல் கடிந்தாள்; யாங்கு இனி யாம் என் செய்கம்?
புன்னையங் கானலுள் புக்கு இருந்தும் நின்னை
நினையான் துறந்த நெடுங் கழிச் சேர்ப்பற்கு
உரையேனோ, பட்ட பழி? 52

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது
அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர்
நிலவு நெடுங் கானல் நீடார் துறந்தார்;
புலவு மீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல், தோழி! நமக்கு? 53

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது
என்னையர் தந்த இற உணங்கல் யாம் கடிந்து,
புன்னையங் கானல் இருந்தேமா, பொய்த்து எம்மைச்
சொல் நலம் கூறி, நலன் உண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம் காணுமாறு? 54

பாங்கி தலைவனை இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது
கொக்கு ஆர் கொடுங் கழிக் கூடு நீர்த் தண் சேர்ப்பன்
நக்காங்கு அசதி நனி ஆடி, - தக்க
பொரு கயற்கண்ணினாய்! - புல்லான் விடினே,
இரு கையும் நில்லா, வளை. 55

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது
நுரை தரும் ஓதம் கடந்து, எமர் தந்த
கருங் கரை வன்மீன் கவரும் புள் ஓப்பின்,
புகர் இல்லேம் யாம் இருப்ப, பூங் கழிச் சேர்ப்பன்
நுகர்வனன், உணடான், நலம். 56

தோழி இரவுக் குறியிடம் தலைவிக்கு உணர்த்தியது
கொடு வாய்ப் புணர் அன்றில் கொய் மடல் பெண்ணைத்
தடவுக் கிளை பயிரும் - தண் கடல் சேர்ப்பன்
நிலவுக் கொடுங் கழி நீந்தி, நம் முன்றில்
புலவுத் திரை பொருத போழ்து. 57

தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி வருந்துதல்
சுறா எறி குப்பை சுழலும் கழியுள்,
இறா எறி ஓதம் அலற இரைக்கும்
உறாஅ நீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்,
பொறாஅ, என் முன்கை வளை. 58

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி படைத்து மொழிந்தது
தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை-
மாழை மான் நோக்கின் மடமொழி! - 'நூழை
நுழையும் மட மகன் யார்கொல்?' என்று, அன்னை
புழையும் அடைத்தாள், கதவு. 59

தோழி தலைவிக்குத் தலைவன் வரைவொடு புகுந்தமை சொல்லியது; வினை முற்றி மீண்ட தலைமகன் வரவு அறியச் சொல்லியதூஉம் ஆம்.
பொன் அம் பசலையும் தீர்ந்தது; - பூங்கொடி!-
தென்னவன் கொற்கைக் குருகு இரிய, மன்னரை
ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ,
கூடல் அணைய வரவு. 60

No comments: